Sunday, May 8, 2011

ஜே. கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம்



ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜே.கே, கிருஷ்ணாஜி, ஜே.கிருஷ்ணமூர்த்தி என்றெல்லாம் அறியப்படும் இவர் இந்த நூற்றாண்டின் எண்ணப்படவேண்டிய சிந்தனையாளர்களில் ஒருவர்.
மனிதனின் முழு விடுதலைக்கு பாடுபட்ட உன்னத மனிதர். தன்னை எந்த இனத்துடனோ,நாட்டுடனோ, மொழிப் பிரிவினோடோ சேர்த்துக் கொள்ளாத உண்மையான உலக மனிதர் இவர்.
இவர் ஒழுங்கு படுத்தப்பட்ட எந்த மதத்தையும் நிராகரிக்க வேண்டும் என்றார்.ஒழுங்குபடுத்தலில் ஊழல் மண்டிக்கிடக்கிறது என்றார். உண்மைக்கு பாதையில்லை என்றார். குரு என்பவனை முழுவதும் நிராகரி என்றார். உனக்கு நீதான் வழிகாட்டி என்றார். கிருஷ்ணமூர்த்தி என்ற மனிதன் முக்கிமில்லை அவன் சொல்வதில் உண்மையைக்
கண்டால் அவ்வுண்மையைக் காத்து வையுங்கள் என்றார். இந்த நூற்றாண்டு இளைஞர்களுக்கு அவர் சொல்லும் முக்கிய செய்தி, கேள்வி கேளுங்கள் என்பதுதான்.எந்த தலைமையையும் கேள்வியின்றி ஒத்துக் கொள்ளாதீர்கள் என்றார். கேட்கும் கேள்வி உக்கிரமாக இருந்தால் அது தன்னுள் பதிலை வைத்திருக்கும் என்றார். கேள்வி கேட்க
பயப்படுபவன்தான் மற்றவர் தலைமையை ஏற்றுக் கொள்கிறான் என்கிறார். மெய்கீர்த்தி கண்டு காலில் விழும் இந்தியர்களை எழுப்பி தன்மானம் கொள்ளுங்கள் என்றார். என் கையைப் பிடியுங்கள் கால் வேண்டாம் என்றார். 
பாலகனாக இருக்கும் போதே இந்தியாவிலிருந்து பெயர்த்து எடுக்கப் பட்ட வித்து இது.தாய் மொழி மறக்கடிக்கப்பட்டு, ஆங்கிலம் கற்று அதிலேயே கடைசிவரை பேசி ஆங்கிலத்திற்கு செழிப்பு சேர்த்த இந்திய வித்து இது. ஆலமாய் கலிபோர்னியா ஒஹாய்யில் வளர்ந்து உலகிற்கு நிழல் தந்தது. இவர் வளர்ந்த காலமும் புரட்சிகள் மலர்ந்த காலம். இவரது சகாக்கலாக ஆல்டஸ் ஹக்ஸ்லி, பெர்நாட்ஷா, ஜோஸப் கேம்பல், சார்ளி சாப்லின், தலாய்யிலாமா.. இப்படி.
எல்லோரிடம் பழக்கமுண்டு. இவரது நட்பில் மைல்கல் பதித்தவர் ஆங்கில விஞ்ஞானி டேவிட் பாம். இவருடன் சேர்ந்து இணைந்து செய்த உரையாடல்கள் வாழ்வின் அர்த்தத்தைத் தேடும் எல்லோரும் கேட்க/படிக்க வேண்டிய செய்தி. ஜே.கே குழந்தையின் கல்வியில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார். பொருள் முதல் நோக்கு கொண்ட மேலை நாட்டு கல்வி முறையை பெரிதும் கேள்விக்கு உள்ளாக்குகிறார்.
கல்வி என்பது பொறாமை, போட்டி இல்லாத, எந்த பந்தயமுமில்லாத இயற்கையான தேடுதலுடன் அமைய வேண்டும் என்றார். 
அறிவும் அன்பும் ஒன்று என்றார். சிந்தனை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் வாழ்வு அறிவின் பாற்பட்டதாய் அமையும் என்றார். சிந்தனைதான் வாழ்வு என்னும் போது "தான்" என்ற அகங்காரம்தான் நிற்கும் என்றார். இந்த "தான்" நிலைதான் இவ்வுலகின் அத்தனை துன்பத்திற்கும் ஆதாரம் என்றார். உலகின் பிரிவுகள் தோன்றும் இடம் சிந்தனை என்றார். வேறு படும் இரு சிந்தனைகள் வன்முறையின் தோற்றுவாய் என்றார். உலகும், மனிதனும் பிரிக்க பட முடியாத
முழுமையானவை என்றார். நாம் போடும் அத்தனை சட்டங்களும், எல்லைக் கோடுகளும் அர்த்தமற்றவை என்றார். 
மனிதன் பூரணம் அடையும் போது தோன்றும் ஆழ்ந்த அமைதியில் இறைமை குடி கொண்டு இருக்கும் என்றார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் போதனைகளை குறள் வடிவில் சுருக்கிச் சொல்லவும் என்று
கேட்ட போது,*நீ*** இருக்கும் வரை, *மற்றது*** இருக்காது என்றார். இந்த *மற்றது* ** மனிதாபிமானம், அன்பு, இறைமை, கருணை, வாத்ஸல்யம், பாசம் என்று எதுவாகவேணும் அமையும். 
ஜே.கே. இந்த நூற்றாண்டின் (மதப்) புரட்சியாளர். அவர் சிந்தனைகள் ஆழ்ந்து ஆராயத் தக்கன. 
-- 
நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச 

1 comment:

  1. வெளிப்பட்டது எனும் அறிவியல் ஆன்மீக புத்தகம் இங்கு இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் : http://www.indiastudychannel.com/attachments/resources/111262-24825-iruthiyaka_vadivamaiththathu.pdf

    ReplyDelete