Friday, February 4, 2011

வெற்றிநோக்குடன் வாழுங்கள்.


* மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுவோருக்கு உதவுவது ஒன்று தான்.

* மனதை ஒருமுகப்படுத்துவது தான் கல்வியின் அடிப்படை லட்சியமாகும்.

* வெற்றி பெறுவதற்கு விடா முயற்சியும், தளராத மனவுறுதியும் தேவை. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்.

* நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு வெற்றி நோக்குடை யவர்களாக வாழுங்கள். வெற்றிக்கான ரகசியம் இது தான்.

* தான் என்னும் ஆணவத்தையும், பேராசையையும் அடக்கும் போது பெரும் வெற்றிகளைப் பெறமுடியும். அரும்பெரும் செயல்களைத் தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

* சுயநலம் ஒழுக்கக்கேட்டினை விளைவிக்கும். சுயநலமின்மையோ நல்லொழுக்கத்தைத் தரும்.

* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும். ஆன்மிக ஈடுபாட்டினால் மட்டுமே மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மை வெளிப்படும். 

- விவேகானந்தர்.



உணவானது எளியதாக, மிதமான அளவுடன் இருக்க வேண்டும். கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்ணப் பழகிக் கொள்ளுங்கள். சரிவிகித உணவாக, சத்துள்ள உணவாக சாப்பிடுங்கள்.

தினமும் குறிப்பிட்டநேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. குறிப்பாக யோகாசனம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது சிறப்பு. நீண்ட நடைப்பயிற்சியிலோ அல்லது சுறுசுறுப்பான விளையாட்டுப் பயிற்சிகளிலோ அன்றாடம் ஈடுபட வேண்டும். 

ஏகாதசி, கார்த்திகை போன்ற விரதங்களை கடைபிடிப்பதும், மவுனவிரதத்தை மேற்கொள்வதும், பழஆகாரங்களை உட்கொள்வதும் மனவுறுதியையும் உடல் உறுதியையும் தரவல்லதாகும்.

நேர்மையாக இருங்கள். உழைத்து சம்பாதியுங்கள். நியாயமான வழியில் அல்லாமல் பணத்தையோ, பொருளையோ யாரிடமும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். 

உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று உள்ள உடைமைகளையும் குறைக்கப் பாருங்கள். எளிய வாழ்க்கையில் தான் உயரிய சிந்தனைகள் உருவாகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.

எல்லா நேரங்களிலும் கடவுளை நினையுங்கள். குறைந்த பட்சம் காலை, மாலையில் கடவுளை தியானிப்பது மிகவும் நன்மை தருவதாகும். 

- சிவானந்தர்

No comments:

Post a Comment