Thursday, January 27, 2011

திருப்தி என்பது எதுவரை?


எச்.நடராஜன்

More Info : http://www.thannambikkai.net/author/natarajan/
சென்ற இதழ் தொடர்ச்சி….
சற்றே நம்மைச் சுற்றிப் பார்த்தால் மன உளைச்சலுடன் திருப்தியில்லாமல் வாழ்க்கையை வேண்டா வெறுப்பாக நடத்துபவர்களைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது.
வாழ்க்கையில் எளிதில் திருப்தி அடைய சில அழகான வழிமுறைகள், கோட்பாடுகள் உள்ளன. அவற்றை புரிந்து கொண்டால் மனிதன் என்றும் ஆனந்தமாக வாழலாம். அவை :
1. வாழ்க்கை எனும் நாடகம் வெகுவிரைவில் முடிந்து திரை விழுந்து விடும் என்பதை உணர்வதில்லை. இதில் நீ அரசனாக இருந்தால் என்ன? ஆண்டியாக இருந்தால் என்ன? நம்மை வேடிக்கை பார்க்கும் மக்கள் அரசனாக இருந்தால் கோயில் கட்டப் போகிறார்களா? ஆண்டியாய் இருந்தால் பரிதாபப்பட்டு ஆதரிக்கப் போகிறார்களா? என்றால் இரண்டும் இல்லை. சும்மா பார்த்துவிட்டுப் போய் விடுவார்கள் அவ்வளவுதான்.
2. ‘பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்’ நாம் செய்யும் செயல்கள்தாம் நம்மை மற்றவரைவிட உயர்ந்த மனிதனாக மாற்றுமே தவிர பணம், காசு, அந்தஸ்து மட்டுமல்ல. திருவண்ணாமலையில் தெருவில் அலைந்து திரிந்த விசிறி சாமியாரைத் தேடித்தான் கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், பிரபலமானவர்கள் திருவண்ணாமலை சென்று அவர் கடைக்கண் அருள் கிடைக்காதா? என்று ஏங்கினார்கள். மலரில் மணம் இருந்தால் வண்டுகள் அதனை நோக்கித் தாமே வரும்! அழைக்க வேண்டியதில்லை.
3. என் தந்தை கல்லூரிப் பேராசிரியராக தலைசிறந்த பண்பாளராகத் திகழ்ந்ததால், அவரது மாணவர்கள் சக ஆசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து அவரது 81 வயது பிறந்த நாளைய விமரிசையாக கொண்டாடினர். அவர் பெயரில் சுமார் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் நன்கொடை அறக்கட்டளைக்காக சேர்ந்தது. இது இக்காலத்தில் நடக்கக்கூடிய காரியமா? இல்லை அவருடைய உயர்ந்த எண்ணங்கள் அப்படிப்பட்டவை இந்த வெற்றிக்குப் பின்னணி அவர் அடைந்த திருப்தியே ஆகும்.
ஆக நான் இறுதியாக சொல்ல விரும்புவதென்னவென்றால்,
நாம் செய்யும் நல் எண்ணத்துடன் அடுத்தவர்கள் சந்தோஷத்துக்கு பிரதி உபகாரம் கருதாமல் செய்யும் செயல்களாய் இருந்தால் போதும். நமக்கு திருப்தி ஏற்பட்டால், மற்றவர்க்கும் திருப்தி ஏற்படும். அதன் மூலம் நம்மைப் பற்றி நல்லெண்ணம் எங்கும் பெருகும். அந்நல்லெண்ணம் நம்மை மட்டுமல்லாமல் நம் சந்ததியையும் வாழ வைக்கும்.
தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் நான் நாமக்கல் கவிஞரின் பேரன் என்று சொன்னவுடன் அந்த அதிர்வலையில் அப்படியா என்று மிகுந்த மரியாதையுடன் எழுந்து வணங்கியவர் ஏராளம். அந்த மரியாதை எனக்கா? இல்லை! தன் வாழ்க்கையை காந்தியக் கொள்கை களுக்காக அர்ப்பணித்து ஒப்பற்றஇலக்கிய சேவை செய்த அந்த தனி மனித ஆத்ம சக்திக்குத்தான். சமுதாயத்துக்குத் தொண்டு செய்வதில் திருப்தி அடைந்த அந்த மாமனிதருக்கு சமுதாயம் மரியாதை செய்கிறது.
எண்ணங்கள் உயர்ந்தால்
செயல்கள் உயரும்
செயல்கள் உயர்ந்தால்
சிறப்புகள் பெருகும்
சிறப்பாக வாழ்தலே
திருப்தியான வாழ்க்கை
வெற்றியாளர்களுக்கு மாற்றம் என்பது அவர்களாகவே எடுக்கும் முடிவு; தோற்பவர்களுக்கோ, மாற்றம் என்பது ஒரு சமாதானம்.

No comments:

Post a Comment