Friday, January 28, 2011

தன் வினை தன்னை சுடும் -Author: பாலா


இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டவை!
என் வீட்டை தாண்டி சில தூரம் நடந்தால், ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் அடுக்கி இருக்கும் ஓர் நெரிசலான வீதி வரும்.
அங்கு வசிப்போர் எல்லாம் கூலி வேலை, குடிசை தொழில் போன்றவைகளுக்கு செல்பவர்களே.
அங்குள்ள ஓர் தேனீரகத்தில் தான் நானும் என் நண்பர்களும் ஒன்று சேர்வோம். வாரம் ஒரு நாள் அங்கு அரட்டை, சிரிப்பு என்று அந்த தேனீரகமே ஜொலிஜொலிக்கும்!

சென்ற ஞாயிற்றுக்கிழமை அங்கு ஓர் சம்பவம்.
நாங்கள், முக்கியமாக நான்! சிரித்து சிரித்து என் வயிறு புண்ணாகி போன நேரமது!!!
அந்த தேனீரகத்தின் எதிரில் ஒருவர் வசித்து வருகிறார்.
அவர் தான் இக்கதையின் நாயகன்!
அவரை பற்றி என்ன சொல்ல… எப்படி அறிமுகப்படுத்துவது….
‘புது பணக்காரன்’ என்ற ஓர் அடைமொழி இவருக்கு சரியாய் பொருந்தும் என்று நினைக்கிறேன்!

சரி! இனி வரும் சிறு சம்பவத்தை நீங்கள் படித்து முடிக்கும் போது இப்பெயர் இவருக்கு சரியாக தான் பொருந்துகிறது என்று தோன்றும்!
சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்த தேனீரகத்தில் வழக்கம் போல் தேனீரொன்றில் மூழ்கி இருந்தோம், நானும்
என் நண்பர்களும்.
நல்ல மழை!
வீதியெங்கும் இருந்த சிறு சிறு குழிகளினுள் மழை தன்னை தானே தேக்கி கொண்டாள்.
வழக்கம் போல், சிறிது நேரம் மட்டும் மேடை மேல் அன்ன நடை போட்டுவிட்டு திரை பின் மறைந்து போகும்
மாடல் அழகி போல் மேகங்களுக்கிடையே காணாமல் போனாள் மழை அழகி.
மழை பெய்யும் வரை, பேய் கடந்த வழி போல ஆள் அரவமற்றிருந்தது அந்த வீதி.
அதன் பின் வண்டிகள் சரமாரியாய் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தது.
அப்போது நம் ‘புது பணக்காரர்’ அவர் வீட்டின் முன் தென்ப்பட்டார்
தன் சுருங்கிய கண்களை கொண்டு சுற்றியும் முற்றியும் பார்த்தார்.
அப்போது அங்கு ‘வீர்’ரென்று கடந்த வண்டி ஒன்று, புது பணக்காரரின் வெள்ளை சொக்காவின் மேல் ‘மாடர்ன் பேயிண்டிங்’யிட்டு சென்றது
சேற்றை கொண்டு அபிஷேகம் செய்த நிலைமையில் நம் நாயகன்!
கடுப்பில் அவருக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகள் அவருடைய உலர்ந்த உதடுகள் அருவியாய் கொட்டின
நாங்கள் இதையெல்லாம் தேனீரகத்தில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தோம்.
“டேய்! யாராவது போய் ஹெல்ப் பண்ணுங்கடா! பாவம்…” என்றேன் நான்
அதற்கு என் நண்பன் ஒருவன், “தம்புடு! இவனுக்கு இது வேணும்டா!! ஏன் சொல்றன்னு கேளு!” என்றான்.
ஏன் என்பது போல் எங்கள் விழி முன் வந்து நிற்க,
“டேய்! இவனிருக்கானே… மகா அயோகியன்! மூணு நாலு மாசத்துக்கு முன்னாடி, இந்த தெருவோட நடுவால போற பைப் லைன் எடுத்து அவன் வீட்டுக்குள்ள ஒரு கனெக்ஷன் கொடுத்துக்கிட்டான். அவன் வீட்டுக்கு முன்னாடி இருக்கிற அந்த குழிய மூடாம விட்டுட்டான். அதுல ஒரு ஸ்கூல் பொன்னு சைக்கிள்ள போகும்போது விழுந்து அடி பட்டிச்சு. அந்த பொன்னொட அம்மா இந்த மாக்கான் கிட்ட சொன்னாங்க, ‘ஐயா! இந்த குழிய மூடிடுங்க. ஏன்னா வேற யாரும் இதுல விழுந்து அடி பட வேணாம்’ன்னு! அதுக்கு இவன் பெரிய இவன் மாதிரி சிரிக்கிட்டே’ஏங்க ரோடுல ஏதோ குழி இருந்துச்சுன்னா அத நான் எதுக்குங்க என் காசை போட்டு மூடணும்? இது நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு.. நான் ராபகலா உழச்சு சம்பாதிச்ச காசுங்க! ஏன் உங்களுக்கு வேணும்னா நீங்க செலவு பண்ணி மூடிக்கிங்க! இல்லேன்னா சர்க்கார் ஆளுங்க வந்து மூடுவானுங்க! நானெல்லாம் ஒரு சல்லி காசு செலவு பண்ண மாட்டேன்’ன்னு சொல்லிட்டான். தெருவுல இருக்கிற வேற ஆளுங்க எல்லாம் சொல்லியும் கேக்கல… நாய்! இப்போ அவன் வெட்டுன குழி அவனுக்கே ஆப்பாயிடுச்சு மச்சி!!!” என்று சிரித்தான்.
‘இவருக்கு இது சரியான தண்டனைதான்!’ என்று நானும் சிரித்தேன்.
அவர் வீட்டின் முன் வண்டிகள் கடந்து கொண்டுதான் இருந்தன, சேற்றை வாரி வீட்டின் முற்றத்தில் தெளித்து அபிஷேகம் செய்து கொண்டும்தான் இருந்தன!

No comments:

Post a Comment