Thursday, March 10, 2011

தற்கொலைகளும் தைரியசாலிகளும்!



ஒரு நிமிடம் தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் தைரியம் இருந்தால் தான் வாழ முடியும் என்பது வாக்கு.
தற்போது எங்கு பார்த்தாலும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் பலவாக இருக்கலாம். ஆனால் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் ஒருவரது பிரச்சினை இந்த உலகத்தில் எத்தனையோ பேருக்கு இருக்கிறது. அவர்கள் எல்லாம் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்றால் உடல்களை எடுத்துப் போடக் கூட ஆள் இருக்காதல்லவா.
தற்கொலை என்பது தனிப்பட்ட ஒருவரது மனநிலையைப் பொறுத்தது. மன இறுக்கம், பிரச்சினை, தோல்வி, நம்பிக்கையின்மை, ஏமாற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்காக தற்கொலைகள் நடக்கின்றன.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏதேனும் ஒன்று தவறாக நடக்கும்போது மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கிறான். தற்கொலைக்கு வயது, பொறுப்புகள், ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்ற பேதமெல்லாம் இல்லை. மனநிலை ஒன்று மட்டுமே காரணமாகிறது.
தற்கொலை செய்ய முயன்றவர்களில் 30 விழுக்காட்டில் இருந்து 70 விழுக்காட்டினர் மனநிலை அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மனநிலை அழுத்த நோய் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எடுத்துக் கொள்ளும் மது அல்லது வேறு வகையான போதைப் பொருட்கள் தற்கொலையை தூண்டும் ஒரு கருவியாக அமைந்துவிடுகிறது.
மனநிலை தடுமாற்றம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று கூற முடியாது. ஆனால் அதே சமயம் அவர்களுக்கு நமது உதவி தேவைப்படுகிறது என்று கூறலாம்.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உடையவர்கள்,
எப்போதும் ஏதாவது ஒரு தற்கொலை முறையைப் பற்றி பேசி அல்லது யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
தன்னம்பிக்கையை இழந்தவர்கள் போல அல்லது தனக்கென்று யாருமில்லை என்பது போன்ற ஒரு எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள்.
நடத்தையில் வெகுவாக மாற்றத்தை வெளிப்படுத்துதல்
எப்போதும் இல்லாத அளவிற்கு குடிப்பது அல்லது போதைப் பொருளை உபயோகிப்பது
யாருடனும் பேசாமல் எதையோ பறிகொடுத்தது போல இருப்பது
எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் தட்டிக் கழிப்பது
எதிர்கால திட்டங்களைப் பற்றிய எண்ணமோ ஆசைகளோ இல்லாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்றாவது தற்கொலை செய்து கொள்ளும் 10 பேரில் 8 பேரிடம் காணப்படும் என்று மன‌‌ச்‌சிதைவு‌‌த் துறை நட‌த்‌திய ஆய்வு தெரிவிக்கிறது.
அதே சமயம், தற்கொலைப் பற்றி அடிக்கடி பேசுதல், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுதல், தற்கொலையில் இருந்து மீட்கும் அமைப்புகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் நபர்களில் பாதி பேர் தற்கொலை பற்றிய பயத்தில்தான் அவ்வாறு செய்கிறார்களே தவிர, தற்கொலை செய்து கொள்ள அவர்களுக்கு எள்ளளவும் துணிச்சல் இருக்காது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

ஒரு வேளை தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை நீங்கள் கண்டால்…
உடனடியாக உங்களது அதிர்ச்சியை அவரிடம் வெளிக் காட்டாதீர்கள்.
திட்டுவதோ அல்லது மற்றவர்களுக்கு தெரிவிப்பதாக எச்சரிப்பதோ பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும்.
அவருக்கு தைரியமூட்டி அவரது பிரச்சினையை எந்தவித எதிர்வாதமும் இன்றி அமைதியாகக் கேளுங்கள்.
மனநிலையை நீங்களாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். அதற்குரிய மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுதான் ஆலோசனைகளை அளிக்க வேண்டும்.
அவரை தனியாக விட்டுவிட்டு எங்கும் போக வேண்டாம்.
அவர் மறுத்தாலும் அவருக்குரிய உதவிகளை செய்யுங்கள்.
தற்கொலைக்கு மருந்து!
தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு இரண்டு வகைகளில் சிகிச்சை அளிக்க‌ப்படு‌கிறது. ஒன்று தியானம், மற்றொன்று ஆலோசனை வழங்குதல். ஒரு சிலருக்கு இரண்டுமே தேவைப்படும்.
ஆலோசனை
தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து அந்த பிரச்சினையை வேறு வகையில் பார்க்கவும், அதற்குரிய தீர்வைத் தேடவும், அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்கப்படும்.
தங்களது மனோபாவத்தை மாற்றிக் கொள்ளுதல், தன்னம்பிக்கையை வளர்க்க பயிற்சி, பிரச்சினைகளை கையாளும் திறன், சமூக அமைப்பு பற்றிய அறிவு, மனதிற்கு ஓய்வளிக்கும் பயிற்சி, தசைகளை அமைதிப்படுத்துதல் போன்றவையும் இந்த ஆலோசனை சிகிச்சையில் அடங்கும்.
தியானம்
மனதை ஒருநிலைப்படுத்தும் தியானப் பயிற்சி அளிக்கப்படும். தியானம் பயின்றவரை வைத்து அவருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
அதே சமயம் மனநிலைக்குத் தகுந்தவாறு மனநல மருத்துவரிடம் மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாட்கள் செல்ல செல்ல மருந்தின் அளவில் லேசான மாற்றத்துடன் மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பொதுவாக நான்கு முதல் 9 மாதங்கள் வரை மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். பின்னர் மருத்துவரின் ஆலோசனையுடன்தான் மருந்தை நிறுத்த வேண்டும்.
இந்தியாவில் தற்கொலை
தற்கொலைக்குக் மன அழுத்தம்தான் முக்கியக் காரணம் என்பது பு‌ரி‌ந்து ‌வி‌ட்டது. ஆனால் தற்கொலைக்கே தூண்டும் அளவிற்கு மன அழுத்தம் வர முக்கியமாக மூன்று காரணங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதில் முதல் காரணம் எய்ட்ஸ் நோய் என்றும், இரண்டாவதாக தேர்வு அல்லது மற்றவற்றில் தோல்வியாகவும், மூன்றாவதாக கடன் தொல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் கிராமங்களில்தான் அதிகப்படியான தற்கொலைகள் நடக்கி‌ன்றன.
எ‌ய்‌ட்‌‌ஸ் நோ‌ய்‌க்கு மரு‌ந்து இதுவரை க‌ண்ட‌றிய‌ப்படாத ‌நிலை‌யி‌லு‌ம், எ‌ய்‌‌ட்‌ஸ் எ‌ன்றாலே தகாத உறவு வை‌த்‌திரு‌ந்தா‌ல் வர‌க்கூடிய நோ‌ய் எ‌ன்ற பொதும‌க்க‌ளி‌ன் எ‌ண்ண‌த்‌தினாலு‌ம் எ‌ய்‌ட்‌ஸ் நோ‌ய் தா‌க்‌கியவ‌ர்க‌ள் உட‌ல் அள‌வி‌ல் அ‌ல்லாம‌ல் மன அள‌வி‌ல் ‌மிகு‌ந்த உளை‌ச்ச‌ல் அடை‌கி‌ன்றன‌ர்.
இ‌ந்த சமூக‌ம் எ‌ன்ன சொ‌ல்லுமோ எ‌ன்று பய‌ந்து‌ம், உ‌ற்றா‌ர் உற‌வின‌ர்க‌ளி‌‌ன் புற‌க்க‌ணி‌ப்பாலு‌ம் தா‌ன் அ‌திகமான எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.
சில ப‌ள்‌ளி‌, க‌ல்லூ‌ரி மாணா‌க்க‌ர்க‌ள் த‌ங்களது தே‌ர்வுக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் தோ‌ல்‌வி‌‌க்காக மனமுடை‌ந்து த‌ற்கொலையை‌த் தேடி‌‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர். தே‌ர்வு‌‌த் தோ‌ல்‌வி‌க்கு அடு‌த்தபடியாக காத‌ல் தோ‌ல்‌வியு‌ம் உ‌ள்ளது.
கட‌ன் அள‌வி‌ல் எடு‌த்து‌க் கொ‌ண்டா‌ல் க‌ந்து வ‌ட்டி‌க்கு‌ம், வ‌ங்‌கி‌யி‌ல் கட‌ன் வா‌ங்‌கியு‌ம் ‌நில‌த்‌தி‌ல் பண‌த்தை‌ப் போடு‌ம் ‌விவசா‌யி‌க்கு, மழையு‌ம், த‌ட்பவெ‌ப்ப ‌நிலை‌யி‌ல் கைகொடு‌க்காம‌ல் போகு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் பே‌ரிடி ‌விழு‌கிறது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் வா‌ங்‌கிய‌க் கடனை செலு‌த்த முடியாம‌‌ல், உண‌வி‌ற்கு‌ம் ப‌ஞ்ச‌ம் ஏ‌ற்ப‌ட்டு, ‌நில‌த்தையு‌ம் இழ‌ந்து த‌ங்களது வா‌ழ்‌க்கையை முடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் ‌நிலை‌க்கு‌த் த‌ள்ள‌ப்படு‌‌கி‌ன்றன‌ர்.
எனவே எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌க்கு‌ம் த‌ற்கொலை எ‌ன்பது ‌தீ‌ர்வாகாது. ‌பி‌ர‌ச்‌சினையை‌க் க‌ண்டு ஓடுவதை‌ ‌விட, அதனை எ‌தி‌ர்கொ‌ண்டு வெ‌ல்வதே மானுட‌த்‌தி‌ன் வெ‌ற்‌றி.
வாழ ‌நினை‌த்தா‌‌ல் வாழலா‌ம்.

No comments:

Post a Comment