Thursday, December 22, 2011

பாண்டிட் க்வீன் [Bandit Queen ]


"Animals, drums, illiterates, low castes and women are worthy of being beaten"- Manusmriti 
படத்தில் கையாளப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்துக்கு முன்னோட்டமாக: -  
’’ மிருகங்கள், மேளங்கள், கல்லாதோர்,  தாழ்த்தப்பட்ட சாதியினர்,  மற்றும் பெண்கள் அடிவாங்கவே படைக்கப்பட்டவர்கள்” - மனுஸ்மிருதி. என்னும் அதிர்ச்சியளிக்கும் வாக்கியத்துடன் இப்படம் துவங்குகிறது.

பாண்டிட் க்வீன்:-  சமகாலத்தில் இந்தியாவில் எடுக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த திரைப்படம், இந்திய கிராமங்களில் இன்றும் நிலவும் சாதிக் கொடுமைகளை இந்த அளவுக்கு பட்ட வர்த்தனமாக எந்தப்படமுமே  சொன்னதில்லை, சேகர் கபூரின்  ஆகச் சிறந்த உலகத்தரமான இயக்கமும் , நஷ்ரத் ஃபதே அலிகான் அவர்களின் இசையும், கணீர் குரலில் அமைந்த ஆலாபனைகளும் படத்தின் பெரும் பலம் ஆகும், ஒரு சாராரின் நன்மைக்கான வியாபார ரீதியான படம் என்னும் அவப்பெயரை  அது துடைத்து சர்வதேச  தரத்தையும் வழங்கிய இசைக்கோர்வை ,அஷோக் மேத்தாவின் அபாரமான ஒளிப்பதிவில் ஒவ்வொரு ஃப்ரேமிலுமே தேர்ந்த கலைத்திறன் மிளிர்வதைக் நாம் காணலாம் . ரேணு சலூஜாவின் நேர்த்தியான எடிட்டிங் கனகச்சிதமானது கூட அது சொல்லவந்ததை மிகுந்த தாக்கத்துடன் நச்சென சொல்லிச் செல்லும். பூலான் தேவியை வெறும் கொள்ளைக்காரியாக கொலைகாரியாக மட்டுமே அறிந்திருந்த இந்தியாவின் இன்னொரு பகுதிக்கு அவர் எதனால் துப்பாக்கியை கையில் எடுத்தார்? வட இந்தியாவில் சாதிவெறி எப்படி தலைவிரித்து ஆடுகிறது என்று ஆணித்தரமாக உரைத்த படம். இது எப்படி சென்சாரிலிருந்து வெட்டுப்படாமல் வெளியே வந்தது? என்று பலருக்கு ஆச்சர்யமாகக்கூட இருந்திருக்கும். கடந்த 14 ஆண்டுகளில் இது போல வேறேந்த உண்மைக் கதையுமே இந்த அளவுக்கு படமாக்கப்படவுமில்லை தாக்கத்தை உண்டு பண்ணவுமில்லை என்பேன். இந்தப்படம் உருவாகையில் பூலான் தேவி ஒரு மாநிலங்களவை உறுப்பினர், அவரை சேகர் கபூர் க்டைசி வரை சந்திக்கவேயில்லை, ஒருவேளை அவரை சந்திக்க வேண்டிவந்தால் தான் படைத்து வைத்திருக்கும் பூலான் தேவி தரும் தாக்கத்தின் அளவு குறைந்து விடுமோ?!!! என்றே அதை அவர் தவிர்த்தார்.

இயக்குனர் சேகர் கபூர்
விர வன்-புணர்வு காட்சிகள் படத்தில் மிகவும் அதிகம் வைத்து , இந்தியாவின் கருப்பான பக்கத்தை ப்ரிட்டிஷாரின் தயாரிப்பின் மூலம் உலகுக்கே கூட்டிக் கொடுத்தார் என்னும் குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது. இந்தியாவில் கோர தாண்டவமாடும் சாதிப் பேயை தோலுரித்துக் காட்டக்கூட ஒரு அந்நிய தயாரிப்பு நிறுவனம் தானே வர வேண்டியிருக்கிறது? அதை நாமே தயாரித்திருக்க வேண்டாமா ?!!! குற்றம் சாட்டுபவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கட்டும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு சாதி வெறியன் திருந்தினாலுமே  ஒரு படைப்பாளியாக அது சேகர் கபூருக்கு கிடைத்த பெரும் வெற்றி என்பேன். இப்படம் மூலம் சீமா பிஸ்வாஸ் என்னும் ஆகச்சிறந்த நடிகை இந்திய திரை உலகுக்கு கிடைத்தார். என்னே இவர் பங்கு? ,தன் வாழ்நாள் சாதனையாக சொல்லிக்கொள்ள ஒரு படம் போதும். நிஜ பூலான் தேவியே இவரது நடிப்பை   பார்த்துவிட்டு என்னையே இவரில் நான் பார்த்தேன் என விக்கித்துப் போனாராம்.  மேலும் படத்தைப் பார்த்த பூலான் தேவி சொன்னது படத்தில் காட்டியது கொஞ்சம் தான் , நடந்ததை என்னால் விவரிக்கக் கூட முடியாது, அப்படி ஒரு பயங்கர நினைவலைகளை மீண்டும் என்னுள் தோற்றுவிக்கும் என்றார்.  இது போன்ற படைப்புகளை தருவதற்கும் பார்ப்பதறகுமே அபாரமான நெஞ்சுரம் வேண்டும். நல்ல புரிதலுள்ளவர்கள் எக்காலத்திலும் பார்த்து பிறருக்கும் பரிந்துரைத்து சாதி பேதம் களைய உதவி செய்ய ஏற்ற ஒரு படம்.

படத்தின் கதை:-
பூலான்  உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற மிகவும் பிந்தங்கிய கிராமத்தில் பிறந்தார். அங்கே உயர் சாதி சத்ரியர்களான தாகூர்களின் ஆதிக்கம் மிகவும் அதிகம். அவர்கள் வைத்தது தான் சட்டம். அங்கே காவல் நிலையம் இருந்தாலும், அங்கே அநேக போலீஸ்காரர்கள் தாகூர்களாகவோ அல்லது ஏனைய உயர் சாதி பிராமணர்களாகவோ இருக்கின்றனர். ஆகவே அங்கே தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் வேதனைகளைச் சொல்லி மாளாது. அதே ஊரில் படகு ஓட்டும் தொழில் செய்யும்  மல்லா எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் பூலான். அவரின் 11 வயதில் படம் துவங்குகிறது .  தந்தை தேவிதீன் [ராம் சரண்] பரம்பரை பரம்பரையாய் பெண்ணடிமைத்தனத்தை ஆதரிக்கும் சராசரி ஆண்களின் மனநிலையை கொண்டிருக்கும் அப்பா.  தாயார்  மூலா , இவர்களுக்கு பிறந்தது நான்கு பெண்களாதலால் சொற்ப வருமானத்தில் எப்படி நால்வரையும் வரதட்சனை கொடுத்து கரை சேர்க்கப்போகிறோம் என்று வாடி வதங்கும் ஒரு சராசரி அம்மா. 

பூலானுக்கு ஒரு மூத்த சகோதரியும் மூன்று இளைய சகோதரியும். ஒரு தம்பியும் உண்டு. அவர்களது கிராமத்தில் பால்ய விவாகம் என்பது அங்கு மிக்ச் சாதாரணம் . பூலானுக்கு அவள் பூப்படையும் முன்பே  திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால்[ஆதித்யா ஸ்ரீவத்சவா]. பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். அக்கிராமத்தில் திருமணம் ஆன சிறுமி பூப்படையும்  வரை பெற்றோரது வீட்டிலேயே இருப்பது வழக்கம்.

தன்படி  முதலில் பூலான்  தாய் வீட்டில் இருந்தவளை புட்டிலால் வலுக்கட்டாயமாக வந்து எனக்கு சீதனமாக தந்த சைக்கிள் துருபிடிக்கிறது, எனக்கு சீதனமாக கொடுக்கப்பட்ட பசு மடி வற்றிப்போய்விட்டது, எனக்கு ஒன்றும் பெண் கிடைக்காமலில்லை. பூலானை அனுப்பமுடியுமா? முடியாதா? என்று மிரட்டி, அவளை தன்னுடன் படகில் கூட்டிச்செல்கிறான், சிறுமி பூலான் செய்வதறியாது திகைத்து அவனுடன் ஒரு பாலத்தின் மீது சாலையைக் கடக்கத் தெரியாமல் பின் தொடரும் காட்சி நம் மனதைப்பிசையும். அவள் இன்னமும் விவரம் அறியாத சிறுமி தான். இது போல வட பால்ய விவாகம் நடந்தேறிய சிறுமிகளையும் பதின்ம வயதில் கர்ப்பம் சுமக்கும் சிறுமிகளையும் நாம் வடஇந்திய கிராமங்களில் அதிகம் பார்க்க முடியும் என்பது மிகவும் வேதனை.

புட்டிலாலின் கிராமத்துக்கு வரும் பூலான் அங்கே , பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என தாகூர் பெண்களால் விரட்டப்படுகிறாள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நீர் எடுக்கும் மிகவும் ஆழமான கிணற்றில் இருந்து நீர் இறைத்து மண்பானையில் நிரப்பி தூக்க முடியாமல் தூக்கி வருகிறாள். அதை அங்கே விளையாடும் சக வயதுடைய உயர்சாதிக்காரகள் வீட்டு பிள்ளைகள்  உண்டிக்கோல் கொண்டு கல்லெறிந்து உடைத்து விட, அவள் அவர்களை  நோக்கி  பெட்டை நாய்களுக்கு பிறந்தவர்களே!!!. உங்களுக்கு கிழவி தான் பெண்டாட்டியாக அமைவாள்!!! என்று சாபம் விட. பானை உடைந்ததை அதட்டிக்கேட்ட மாமியாருக்கு அது உடைந்துவிட்டது, ஏன் தாகூர் பெண்களைப்போல எனக்கு வெங்கலப்பானையை நீர் பிடித்துவர தரவில்லை?!!! ,என்று பதிலுறைக்கிறாள்.  இதைக் கேட்டு கொதித்த  புட்டிலாலின் அம்மா புட்டிலாலை தூபமிட.

ன்று இரவே  புட்டிலால்,  பூலான் பூப்படையாத நிலையிலேயே அவளை  அவன் அம்மாவின் வெளிக்காவலுடன் வன்புணர்கிறான், அக்காட்சியில் பூலான் இறைஞ்ச , வெளியே அவள் இறுக்கத்துடன் ஜெபமாலை கொண்டு ஜெபிக்கும் காட்சி கர்ண கொடூரம், ஆனால் இப்படிப்பட்ட ருத்ராட்சப்பூனைகளும் கொண்டது தானே இச்சமூகம். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள் பூலான், உடல் முழுக்க நகக்குறிகளும், பற்கடி தடயங்களும் சிறு குழந்தை மனதாலும் உடலாலும் நொறுங்குகிறாள். மறு நாளே ஆடுமேய்க்க போகச்சொல்லி கணவனால் விரட்டப்பட்டவள், தன் பெற்றோர் இருக்கும்  ஊருக்கே ஓட்டமெடுக்கிறாள். இதனால் பூலானைக் கைவிட்டுவிட்டு விரைவில் புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.

சில காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது. இப்போது 15 வயது பூலான் தேவியை நாம் பார்க்கிறோம்.  உயர்சாதி தாகூர் வீட்டு இளைஞர்கள் பூலானை படுக்கையில் அடையத் துடிக்கின்றனர். அதில் ஊர் தலைவரின் மகன்  பூலான் விறகு பொறுக்கப் போகையில் அவளை தொடந்து போய்  படுக்கைக்கு அழைத்தும், கெட்டவார்த்தை பேசியும் துன்புறுத்தி வருகிறான். ஒரு முறை அவன் பின் தொடர்ந்து போய் வன்புணர எத்தனிக்க, அவனை பூலான்  தாக்கிவிட்டு ஓட. அதில் ஆத்திரமடைந்த தாகூர் இளைஞர்கள். பூலானை செருப்பால் அடித்து உதைத்து, ஆடைகளை கிழித்து பஞ்சாயத்தில் நிறுத்திவிடுகின்றனர்.

வள் ஊர் தலைவரின் மகனை  எனக்கு அரிக்கிறது. என்று  சரசத்துக்கு அழைத்தாள். என்று அபாண்டமாக குற்றம் சாட்டப்படுகிறது. பூலானின் தந்தையை  ஊரார் மிகவும் கீழ்தரமாக ஏசுகின்றனர். அவர்களுக்கு பேசக்கூட வாய்ப்பளிக்கப்படவேயில்லை. பூலானை வன்புணர எத்தனித்தவனின் அப்பனே தீர்ப்பு சொல்கிறான். பூலானால் தாகூர்களின் மரியாதைக்கு பங்கம் வந்துவிடும். அவள் தாகூர்களுக்கு முன் முக்காடு போட மாட்டாள், தாகூர்களைப்பார்த்தால் காலை தொட்டு வணங்கமாட்டாள். ஆகவே பூலானை ஊரை விட்டே ஒதுக்கி வைக்கவேண்டும். என்று கூறுகிறான் அந்த ஊர் தலைவன்!!!.

பூலான் போக்கிடமின்றி  அலைந்தவள் பக்கத்து கிராமத்திலிருக்கும் தன் ஒன்றுவிட்ட அண்ணன் கைலாஷின்[சௌரப் சுக்லா- ஹேராமில்  லால்வானி] வீட்டுக்குச் செல்கிறாள். ஆனால் அவளுடைய பொல்லாத  மனைவி கைக் குழந்தைக்காரி பூலானை வெறுக்கிறாள், அங்கே கைலாஷ் சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் கொள்ளைக்காரர்களின் குழுக்களுக்கு மளிகை சாமான்களும் பாலும் கொண்டு போய் தருகிறான், பூலானும் கூடச் செல்கிறாள். அப்போது மல்லா இனத்தைச் சேர்ந்த விக்ரம் மல்லா மஸ்தானா [நிர்மல் பாண்டே] என்னும் கொள்ளைக்கார இளைஞனை பூலான் சந்திக்கிறாள். கணவனையும், பெற்றோரையும் பிரிந்த பூலானை அடங்காப்பிடாரி என்று எண்ணி விக்ரம் வெறுக்கிறான்,. இப்போது சில வாரங்கள் கடந்த நிலையில் கைலாஷின் மனைவி பூலானை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லுகிறாள்.ஆனால் கைலாஷ் மனைவியை தடுக்கிறான். அவளின் சுடு சொல் தாளாமல் , அவமானம் தாங்காமல் வெளியேறிய பூலானை கைலாஷ் சமாதானம் செய்கிறார், இருந்தும் தன்மானத்தால் அங்கேயிருந்து மீண்டும் கொடிய தாகூர்கள் வசிக்கும் தன் ஊருக்கே செல்கிறாள் பூலான்.

து ணிச்சலுடன் காவல் நிலையத்துக்குள் செல்கிறாள். ஊராருடன் பஞ்சாயத்து பேச சொல்லி நியாயமும் கேட்கிறாள்.  அங்கே பூலானின் தைரியமான பேச்சை முன்பே நிறைய கேள்விப்பட்டு எரிச்சலிலிருந்த  காவலர்கள், அவள் மீது முந்தைய நாள் ஊர் தலைவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, நிலுவையிலிருந்த விபச்சாரம், திருட்டு வழக்குகளை பொய்யாக ஜோடிக்கின்றனர். பூலானுக்கும்  சம்பல் கொள்ளைக்காரர்களுடன்  வியாபாரத் தொடர்பு இருப்பதாக பொய் சாட்சிகளையும் ஏற்பாடு செய்கின்றனர். அவளின் அண்ணன் கைலாஷ் பூலானை விக்ரம் மல்லா குழுவிற்கு கூட்டிக்கொடுத்தானா?!!! அவர்கள் அசுத்தமானவர்கள் நாறுவார்கள், நாங்கள் மணம் வீசுவோம், அங்கே நீ எத்தனை பேரை புணர்ந்தாய்? எங்கள் இருவரை  நீ தாங்குவாயா? நான் முன்வழியாக புணர்வேன், இவன் ஆசனவாய் வழியாக புணர்வான் , சம்மதம் தானே?!!!  நீ தான் படு என்றதும் காலை உடனே விரிப்பாயே?!!! அரிப்பெடுத்தவளே!!! என்று ஏளனம் செய்கின்றனர்.

ன்று முதல் மூன்று நாட்கள்.காவல் நிலையத்திலிருக்கும் உயர் அதிகாரி முதல், கடைநிலை காவலாளி வரை லாக்கப்பிலேயே வைத்து பூலானை வன்புணர்கின்றனர்.மார்பு, முதுகெல்லாம் கடித்தும் கீறியும் வைத்திருக்கின்றனர். அவள் தன் அப்பாவிடம் அதைக்காட்ட அவர்  வாய் பொத்தி அழுகிறார். அதற்கு போலீஸ்காரர்கள்,உன் மகள் படு என்றால் படுக்கிறாளா?காட்டுக்கூச்சல் போட்டாள்.அதனால் தான் இப்படி விளாசவேண்டியதாயிற்று, உன் ஏனைய மகள்களும் இப்படித்தானா புட்டி லால்?!!! என்று ஏளனம் செய்கின்றனர்.

ணவனின் கொடுமையிலிருந்து தப்பிய பூலான் பெரியவளானதும் காட்டு மிராண்டித்தனமான காவலர்களால் வன்புணரப்படுகிறார். வன்புணர்வதற்கு மட்டும்  தாகூர்களுக்கும் காவலர்களுக்கும் கீழ்சாதி என்பது ஒரு தடையாகவே இருக்கவில்லை.  சட்டம், நீதியை பாதுகாக்க வேண்டிய காவலரே  பூலானிடம் நெறிமுறையின்றி நடந்தனர்.  கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர். இப்படி பூலானிடம் இளம் வயதில் வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், போலீஸ் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள்.

வள் காவலர்களால் கொடூர தாக்குதல்களுக்கு  ஆளாகி இருப்பதை கண்டு சற்றும் மனமிறங்காத தாகூர்கள், பூலானின் தந்தையிடம் பூலானை மீட்க வேண்டுமானால் போலீசாருக்கு 25000 ரூபாய் ஜாமீன் தொகை தரவேண்டும்.  அதை நாங்கள் தருகிறோம். அதை நீங்கள் பொறுமையாக திருப்பிக் கொடுங்கள் என்று ஓநாய் சூழ்ச்சியுடன் போலீசாரிடம் வந்தவர்கள். பூலானை ஜாமீனில் விடுவிக்கின்றனர். சில நாட்கள் உருண்டோடுகிறது.

திடீரென்று ஊருக்குள் நுழைந்த   பாபு குஜார் சிங் [ அனிருத் அகர்வால்] என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை தன்னுடன் அழைக்கிறான்.அன்று ஜாமின் தொகை கட்டிய தாகூருக்கு 25000ரூபாய் பணத்தை நீ  திருப்பி தரவில்லை,அதை நீங்கள் திருப்பித் தரும் வரை  பூலான் எனக்கு அடிமை !!! என்று முழங்குகிறான். பூலானை வெளியே வரவழைக்க அவளின் தம்பியின் மூக்கில் கத்தியை வைத்து கொன்று விடுவேன் என்று மிரட்டியதும் ஒளிந்திருக்கும் பூலான் பதறியடித்து வெளியே வருகிறாள். அவளைக் கைகளைக் கட்டி கடத்திச் செல்கிறான். அங்கே விக்ரம் மல்லாவைப் பார்க்கிறாள் பூலான்.அவன் பெண்களை நாம் தாக்கக் கூடாது என்று சொல்லியும் கேட்கவில்லை அந்த பாபு குஜ்ஜார் என்னும் ஏழு அடி உயர அரக்கன். அவன் முகம் அத்தனை விகாரம். பூலானை சதா சர்வ காலமும் சக கொள்ளையர்கள்  முன்னிலையில் வன்புணர்கிறான்.

தில் அதே மல்லா இனத்தைச்சேர்ந்த விக்ரம் மல்லாவுக்கு மட்டும் உடன் பாடில்லை. ஒரு நாள் படகில் ஆயுதங்கள்    வந்து இறங்குகின்றது, அதை இறக்கி கொண்டுவர மல்லாக்களை அனுப்புகிறான் பாபு குஜ்ஜார், விக்ரம் மல்லா இடைமறித்து  ஏன் உன் தம்பியை அனுப்பவில்லை ? என்று கேட்க, அதற்கு அவன் உன் அம்மாவை வன் புணர உயிரோடு இருக்க வேண்டும், என்று திமிராக உரைக்கிறான். போலீசார் விக்ரம் மல்லாவின் நண்பர்களான இரு மல்லாக்களை சுட்டுக்கொன்றுவிட மிகவும் இடிந்து போகிறான். போலீஸ் துரத்திக்கொண்டே வருகிறது .அவன் கும்பலுடன் தப்பி ஒரு மலை மீது ஏறுகிறான்.

தொடர்ந்து முன்னேற முடியாத போலீசார் அக்கரையிலேயே நின்று விடுகின்றனர், பாபு குஜ்ஜார் சொன்ன அவச்சொல்லும் தாகூர்களின் மீதான் வெறுப்பும் விக்ரம்மை கொதிப்படையச் செய்கிறது, இப்போது பாபு குஜ்ஜார் மலைச்சரிவிலேயே பூலானைக் கிடத்தி சுற்றிலும் தன் தாகூர் இன கொள்ளையரை காவலுக்கு வைத்துவிட்டு முயங்குகிறான். வழக்கம் போலவே மல்லாக்கள் எல்லோரும் அமைதியாக இதைப்பார்க்க. விக்ரம் மல்லா ஒருகட்டத்தில் தாள முடியாமல் பாபு குஜ்ஜார் சிங்கை  தலையில்  சுட்டு வீழ்த்துகிறான். அவனுடன் சேர்த்து விக்ரம்மை எதிர்த்த நால்வர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்,

னி கொள்ளையர் குழுத்தலைவன் ஸ்ரீராம் தாகூர் சிறையிலிருந்து வரும் வரை  நானே தலைவன் என்கிறான் விக்ரம். இப்போது  பூலானுக்கு குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை கற்றுத் தருகிறான். இப்போது அவர்கள் காதலர்களாகவே மாறி குடும்பம் நடத்த ஆரம்பித்தும் விட்டனர். பூலான் இப்போது வீர தீர சாகசங்களை கற்று தேர்கிறாள். பூலான்  மற்றும் விக்ரம் மல்லாவின் மீது கொலை, கடத்தல், கொள்ளை, சூறையாடல் என்று 48 பெரிய குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன. வடமாநிலங்களையே குலைநடுங்க வைத்த பூலான் தேவி குள்ளமான பெண் ஆவாள்.எப்போதும் தோளில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கும். துப்பாக்கி தோட்டாக்கள் கொண்ட பட்டையை  உடம்பை சுற்றி அணிந்திருப்பாள்.

ப்போது அருகே உள்ள ஒரு மல்லாக்களின் கிராமத்துக்கு விக்ரம் மற்றும் பூலான் சக குழுவினர் சகிதமாக வருகின்றனர்,கோவிலில் காணிக்கை வைத்து வழிபடுகின்றனர்,அங்கே இவளை பெண் என்று  பார்த்த சிறுவர்களிடம் இவள் உங்களை தாகூர்களிடமிருந்து காக்க வந்த காளிமாதா.என்று அவள்  தலையில் சிகப்பு துணியை கட்டி விடுகிறான். இந்த கட்டத்திலிருந்து பூலான் காளிமாதா அவதாரம் எடுத்தது போல தன்னை எண்ணிக் கொள்கிறாள். விக்ரம் மல்லா அவளுக்கு இனி நீ பூலான் தேவி என அழைக்கப்படுவாய் என முடிசூட்டிவைக்கிறான்.அவளது உயரம் ஐந்து அடிக்கும் குறைவே. ஆனால் அவளது தோற்றம் மிகவும் கம்பீரமாக ஒரு காளிமாதாவை போல இருக்கிறது. குதிரை  மிது ஏறி அவள் வந்தால் என்றால் அந்த சுற்று வட்டாரமே நடுங்குகிறது. கிராமவாசிகள் மண்டியிட்டு வணக்கம் செலுத்துகின்றனர். காக்கிச்சட்டையில்  நெற்றியைச் சுற்றி சிவப்பு நிற பட்டையை கட்டியிருப்பது அவளுடைய தனிச்  சிறப்பாகும்.

ப்போது கனஷ்யாம் தாகூர் [அனுபம் ஷ்யாம்] என்னும் உயர்சாதி கொள்ளையனை பூலானின் கிராமத்து தாகூர்கள் அனுப்பி விக்ரமிடமிருந்து பூலானை மீட்டு தரும்படி கேட்கின்றனர். அதற்காக விக்ரமிடம் வருகிறான் கனஷயாம்.அவனுக்கு தாகூர்கள் அளித்த ஜாமீன் தொகையான 25000 ரூபாயுடன் சேர்த்து வட்டியுடன் பணம் தந்து கடனை அடைக்கிறான் விக்ரம் மல்லா. கன்ஷ்யாம் சொல்கிறான். உன் கண்களில் தாகூர் மீதான வெறுப்பை நான் காண்கிறேன் விக்ரம்,அது மிகவும் ஆபத்து.பூலான் உன்னிடம் இருப்பது உனக்கு அழிவு,அதிர்ஷ்டத்தை தராது, என்கிறான், அதற்கு விக்ரம் மல்லா பாண்டிட்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை வாழ்வில் தாங்களே தான் தேடிக்கொள்வர் என்பது தானே உண்மை?!!! ,என்று மடக்கி அவனை திருப்பி அனுப்புகிறான். தன்னை பணம் தந்து மீட்ட விக்ரம் மீது பல மடங்கு மதிப்பு வந்து விடுகிறது பூலானுக்கு.

விக்ரம் மல்லாவின் கொள்ளையர் குழுவில் மல்லாக்களும் தாகூர்களும் இரண்டு பிரிவாக,  உள்ளனர். விக்ரம் மல்லாவை மல்லர்கள் ஆதரித்தும், உயர்சாதி தாகூர்கள் வெறுத்தும் வருகின்றனர். கொள்ளை கும்பல் தலைவன் ஸ்ரீராம் தாகூரின் [ கோவிந்த் நாம்டியோ ] வரவுக்கு ஆவலாக காத்திருந்த அவர்கள் ஸ்ரீராம் தாகூர் வந்ததும் அவன் பக்கம் தாவுகின்றனர். ஸ்ரீராம் தாகூர் ரூபத்தில் மீண்டும் பூலானுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் தரப்படுகின்றன. கோபக்கார இளைஞன் விக்ரம் மல்லாவை நயவஞ்சகமாக தீர்த்துக் கட்டி விட்டு பூலானை அடைய துடிக்கிறான் ஸ்ரீராம் தாகூர்.அவனுக்கு உறுதுணையாக அவன் தம்பி லால் தாகூரும் இருக்கிறான், இருவருமே போலீஸ் உளவாளிகள். அவ்வப்பொழுது போலீசாருக்கு சக கொள்ளயர்களை காட்டிக்கொடுக்கின்றனர்.

ப்படி ஒரு நாள் விக்ரம் மல்லாவை ஸ்ரீராம் தாகூர் மறைந்திருந்து முட்டியில் சுட்டு விட, பூலான் தன் உயிரைப் பணயம் வைத்து அவனை அருகே உள்ள நாக்பூர் நகருக்குள் கூட்டிச் சென்று ஒரு அறையைப் பிடித்து விக்ரம் மல்லாவை கிடத்தி வைத்தியம் பார்க்கிறாள். அங்கே ஓரிரு வாரங்கள் விக்ரம் மல்லாவுடன் உல்லாசமாக குடும்பம் நடத்துகிறாள் பூலான் தேவி.

ன் வாழக்கையிலேயே அவள் சுகித்து இடுந்திருப்பாள் என்றால் அந்த ஓரிரு வாரங்களாகத் தானிருக்கும் எப்படியெல்லாம் இன்பம் துய்க்க முடியுமோ? அப்படியெல்லாம் துய்க்கின்றனர். அதிலும் ஒரு பேரிடியாக விக்ரம் மல்லாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவன் இருவரையும் அடையாளம் கண்டுவிட்டு பூலானிடம், ஒரு ஆளனுப்பி தன் மகளின் திருமணத்துக்கு சீராக ஸ்கூட்டர் கொடுக்க 6ஆயிரம்  ரூபாய் பணம்  கேட்கிறான். அதுவும் ஒரு மணிநேரத்தில் வேண்டும் என்று மிரட்டுகிறான். அங்கிருந்து ஒருவழியாக பூலானும் விக்ரமும் தப்பித்து விலகி தன் சொந்த கிராமமான கபர்வா வருகின்றனர். இப்போது பூலான் தேவியின் தந்தை  நீ இங்கே வந்ததை தாகூர்கள் அறிந்தால் என்ன நடக்குமோ? நீ உன் கணவனிடம் இருந்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காது!!! என்று விரக்தியாகச் சொல்லுகிறார். மிகுந்த மன உளைச்சலடைகிறாள் பூலான். தங்கைக்கு மணமாகி அவளின் குழந்தைகளை கொஞ்சக்கூட முடியாத ஒரு நிலை, பெற்ற தாயிடம் மடியில் தலைவைத்து தூங்க முடியாத ஒரு இழிநிலை, இதற்கு காரணம் புட்டிலால் தானே ? என்று ஆவேசம் கொள்கிறாள்.

பூலான்தேவி தன்னுடைய முன்னாள் கணவன் புட்டிலாலை அவனது கிராமத்திற்கே சென்று  அவனை துப்பாக்கி கட்டையால் அடித்து துவைத்து கழுதை மீது ஏற்றி ஊர்வலம் வரச்செய்கிறாள் ,ஒரு மொட்டை மரத்தில் இறுக்கிக் கட்டுகிறாள். அவனை துப்பாக்கி கட்டையால் அடிக்கிறாள். கூடி வேடிக்கை பார்க்கும்  மக்களிடம் போலீசாரிடம் புகார் கொடுங்கள். எவனாவது சிறுமியை திருமணம் செய்ததை நான் அறிந்தால் அவனை கொல்லுவேன் என்று கர்ஜிக்கிறாள். தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கிறாள். அந்தப்புள்ளியில் சிறுவயதில் உடல் மற்றும் மனரீதியாக தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறாள்.

ந்த நிலையில்   ஸ்ரீராம் தாகூருக்கும் விக்ரம் மல்லா கொள்ளை கோஷ்டிகளுக்குள் பூசல் ஏற்படுகின்றது . ஏனைய மல்லா சாதிக் கொள்ளையர்கள் பூலான் தேவி வசமே தங்கிவிடுகின்றனர். 1980  ஆகஸ்டு, அப்போது  தாகூர்  கொள்ளையர்கள் ஓரிடத்தில் ஒளிந்திருந்த விக்ரம் மல்லாவை சூழ்ச்சி செய்து  ஒளிந்திருந்து சுட்டும் கொன்று விடுகின்றனர். கதறியழுதபடி இருந்த பூலான்தேவி மீண்டும் ஸ்ரீராம் தாகூரால் கடத்தப்படுகிறாள்,  எல்லோரும் கூடி அவளை அடித்த பின்னர், மயக்கமான பூலான் தேவியை, மல்லர்கள் ஓட்டும் படகில்  கிடத்தி . பிக்மாய் என்னும் கிராமத்துக்குள் கொண்டு வருகின்றனர்.

ங்கே ஒரு மாட்டுதொழுவத்தில் அவளைக் கட்டிப்போட்டு, சித்ரவதை செய்தும் வெறி அடங்காத தாகூர்கள். ஊர் தலைவன் ஸ்ரீராம் தாகூர் உட்பட, சுமார் 20 பேர் ஒன்றன் பின் ஒருவராக பூலானை வன்புணர்கின்றனர். மிகவும் துயரமான காட்சியது. அக்காட்சியில் ஒரு ஆணுக்கு பெண் இனத்தின் மீது மிகுந்த பச்சாதாபமும், ஆணிணத்தின் மீதே மிகுந்த வெறுப்பும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. காலங்காலமாக பெண்ணின் மன உறுதியை குலைக்க அவளின் கற்பை சூறையாடுவதை ஆண்கள்? எப்படி கையாண்டு வருகின்றனர் என்று விளங்கும். வன்புணர்வுக்கு பின்னரும் ஆத்திரம் தீராத தாகூர்கள் அவளை   தாகூர் இனப்பெண்கள் நீரெடுக்கும் கிணற்றிற்கு அழைத்துப்போய் நிர்வாணப்படுத்தி நீர் இறைக்க சொல்கின்றனர். இதோ இவள் இந்த மல்லா சாதிப் பெண் தான் தேவியாம், கடவுளாம்!!!? இது என்னைப்பார்த்து அம்மாவை புணர்பவன் என்று சொல்கிறது இது. இனி  ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவன்  வெகுண்டெழுந்தாலும் இது தான் கதி!!!!புரிந்ததா?!!! .என்கின்றனர்.

பூலான் தேவி மூன்று வாரங்களுக்கு பிறகு பிக்மாயிலிருந்து தப்பியவள் போக்கிடமின்றி தன் அண்ணன் கைலாஷின் வீட்டு வாசலிலேயே போய் விழுகிறாள் , அவன் அவளை  உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் செல்கிறாள், பூலான்தேவி. விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க துடித்த பூலான்தேவி, மான்சிங் [மனோஜ் பாஜ்பாய்] என்ற கொள்ளைக்காரனுடன் இணைகிறாள். அவன் பூலான் தேவியை மிகப்பெரிய கொள்ளையர் படைத் தலைவனான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பாபா முஸ்தகிமிடம் [ராஜேஷ் விவேக்] கொண்டு போய் அறிமுகப்படுத்துகிறான்.

முஸ்தகிம் பாபாவின் முதற்கட்ட உதவியால் அவரின் கொள்ளையர் படையைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்குகிறாள். இப்போது அவளிடம்  25 பேர்களும் அவர்களுக்கு 16 துப்பாக்கிகளுமே உள்ளன , அதை வைத்து பூலான் தேவியும் மான்சிங்கும் பக்கத்து கிராமத்தை கொள்ளயடிக்கின்றனர். அது தான் பூலான் தேவி தலைமையில் நடத்தப்பட்ட முதல் கொள்ளை, அதன் பின் அவள் சென்ற இடமெல்லாம் சிறப்பு தான். அவள் பெரும்பொருள் ஈட்டுகிறாள். பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைமக்களுக்கு தானமும் செய்கிறாள்.

1981 ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி , இப்போது பூலான் தேவியை மிகவும் மெச்சிய பாபா முஸ்தகிம், வடக்கு டெல்லி அருகேயுள்ள பிக்மாய்   கிராமத்தில் பூலானின் எதிரி ஸ்ரீராம் தாகூர் திருமணம் வைத்திருக்கிறான் என்று மான்சிங் தகவல் கொடுக்கிறான். அன்றே  தனது கொள்ளை கோஷ்டியுடன் செல்கிறாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் அளித்தனர் என்று குற்றமும் சாட்டுகிறாள்., யாருடைய இறைஞ்சலுக்கும் அன்று அவள் செவிசாய்க்கவேயில்லை,

போதாதற்கு இவளது கட்டளைக்கு செவிசாய்த்து தயாராயிருந்த கொள்ளையர் கூட்டம் வேறு!!!. விடுவாளா?!!! வீடு வீடாகச் சென்று தன் எதிரிகளை தேடி இழுத்துவந்தாள் பூலான் தேவி ,அந்த ஸ்ரீராம் தாகூர், லால் தாகூர் சகோதரர்கள் மட்டும் அன்று சிக்கவேயில்லை, அந்த ஆத்திரம் வேறு, ஏற்கனவே விக்ரம் மல்லா பூலானிடம் ஒரு கொலைசெய்தால் உன்னை தூக்கில் போடுவர். 20கொலைகளைச் செய்தால் உன்னை பத்திரிக்கையாளர்கள் பிரபலமாக்குவர்  ,என்று சொன்னது வேறு நினைவுக்கு வருகிறது.


கிராமத்தில் தாகூர் சாதி ஆண்கள் பெண்கள்   எவ்வளவோ கெஞ்சினர் , ஆனால் பூலான்தேவி அந்த தாகூர் சாதி ஆண்களை வரிசையாக நிற்க வைத்தாள். சிலரைத் தான் முட்டியில் சுட சிலரை தன் கூட்டாளிகள்  கன்னாபின்னாவென சுட்டுத் தள்ளினர். அதில் 22 பேர் சம்பவ இடத்திலேயே செத்து மடிந்தனர். ரத்த கால்வாயே அங்கே ஓடுகிறது. ஒரு குழந்தை வீல் என்று அழுவதை நாம் பார்க்கிறோம். அன்று 8 பேர் கை கால்களை இழந்தார்கள். கணவன் சாவதை, அப்பா சாவதை, அண்ணன் சாவதை என்று ஒரு பெருங்கூட்டமே வாய் பொத்தி கண்ணீர் பொங்க வேடிக்கைப் பார்த்தது. அதில் புறப்பட்ட சிலரால் பின்னாளில் பூலான்தேவி  பழிதீர்க்கப்படப் போவதை அன்று அவள் அறிந்திருக்கவில்லை.

ன்றைய தினம் அக் கிராமத்துக்கு மரண தினம் போலும், காலன் அங்கேயே தங்கியிருந்து தாகூர் இன ஆண்களின் உயிரைப் பறித்துச் சென்றான். சுடுகாட்டில் பிணத்தை எரிக்க இடமில்லை, தொடர்ச்சியாக அக்கரையிலிருக்கும் சுடுகாட்டுக்கு படகிலிருந்து பாடைகள் இறக்கபட்டும்,   சிறு மகனால், வயது முதிர்ந்த தந்தையால், அவர்கள் யாருமில்லாத பட்சத்தில் உறவினர்களால் ஈமைக்கிரியைகள் செய்யப்படுகின்றன. இரவாகி விடுகிறது. மறுகரையிலிருந்து தாகூர் இனப்பெண்கள்  அக்கரையில் எரியும் சிதைகளை கண்ணீருடன் வேடிக்கைப்பார்க்கின்றனர்.

ந்த கொலை சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்குகிறது. பூலான் தேவியை பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவுகிறது. அது மட்டுமல்ல உத்தரப் பிரதேச மாவட்ட அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த படுகொலை.அப்போது உத்தரபிரதேச முதல் மந்திரியாக இருந்த வி.பி.சிங் 1982 ஆம் ஆண்டு இப்படுகொலைகளுக்கு தார்மீகப் பொருப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநில போலீஸ் படைகளும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்படுகின்றன. காடுகளில் புகுந்து பூலான்தேவியை தேடுதல் வேட்டையாடினார்கள். ஆனாலும் அவள் சிக்கவில்லை. பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பூலானுக்கு உதவிய பாபா முஸ்தகிம் போலீசாரால் கைவிலங்கிட்டு என்கவுண்டர் செய்யப்படுகிறான். இவை அனைத்துமே தாகூர் சாதி ஓட்டுக்களுக்காகவே அரசியல்வாதிகளால் இந்த என்கவுண்டர்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதையும் நாம் பார்க்கிறோம். தாழ்த்தப்பட்ட சமுதாய ஓட்டுக்களும் அந்த பக்கிகளுக்கு வேண்டியிருப்பதால் பூலான் தேவியை மட்டும் உயிருடன் பிடிக்க எண்ணியிருக்கின்றனர்.அதற்கு அவர்கள் கண்டுபிடித்தது தான்   பொதுமன்னிப்பு.

காவல்துறையினரின் கண்ணில் படாமல் திரிந்த பூலான்தேவி அப்போதும் தனது எதிரிகளை, துப்பு கொடுப்பவர்களை தேடித் தேடி தீர்த்துக்கட்டியபடியே இருந்தாள். ஒரு கட்டத்தில் நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டதாகக்கூட  பேசப்பட்டது. ஆனாலும் கொஞ்ச நாளிலேயே அவள் உ.பி.க்குள் திரும்பினாள். 1982 ம் ஆண்டு டிசம்பரில் ஜலான் மாவட்டத்தை சேர்ந்த 3 மிராசுதாரர்களையும் கடத்திச் சென்றாள். இதுவே அவள் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாக அமைந்துவிட்டது. பூலான் தேவியின் குழுவைசேர்ந்த மான்சிங் நீங்கலாக அத்தனை கொள்ளையர்களும் போலீசாரால் விரைந்து என்கவுண்டர் செய்யப்படுகின்றனர்.  அந்த செய்தி  அனுதினமும் சுடச்சுட செய்திகளில் முழுப் பக்கத்துக்கு வருகிறது.

குலை நடுங்க வைக்கும் கொள்ளைக்காரியாக இருந்தவள்  இப்போது கொள்ளைத்தொழிலை விட்டு சரணடைய சம்மதிக்கிறாள்.
பூலான் தேவி சரணடைய விதித்த நிபந்தனைகள்:-
  • தனக்கு மரண தண்டனை தரக்கூடாது
  • தன் கொள்ளையர் குழு நபர்களுக்கு 8 ஆண்டுக்கு மேல் தண்டனை தரக்கூடாது
  • தன் தம்பிக்கு அரசு வேலை கிடைக்கச்செய்ய வேண்டும்
  • தன் தந்தைக்கு அரசால்  நிலம் ஒதுக்கித் தரப்படவேண்டும்.
  • சரனைடைகையில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்
  • சிறையில் இருந்து விடுதலை ஆனதும்,தன் தற்காப்புக்கு ஆயுத உரிமம் அரசு தரவேண்டும்
14, பிப்ரவரி 1983ஆம் வருடம் துப்பாக்கியை கீழே போட்டு  மனம் திருந்தி அன்றைய  முதல்வர் அர்ஜுன் சிங் முன்னிலையில் காந்தி மற்றும் துர்க்கை படத்தின் முன்னர்  உத்திரப் பிரதேச போலிசாரிடம் ,சுமார் 10000 மக்கள் முன்னிலையில் சரணடைந்து  11 ஆண்டுகள் கடும் சிறைவாசம் அனுபவித்தார். 1994 ஆம் ஆண்டு பரோலில் வெளிவந்தார். அவர் ஏகலைவா சேனா என்னும் தாழ்த்தப்பட்டோருக்கான தற்காப்பு பயிற்சி இயக்கத்தை ஆரம்பித்தார். பின்னர் அரசியலில் புகுந்து பாராளுமன்ற உறுப்பினரானார். அன்று ஒரு நாள் மதியம் வழக்கம் போல  தன் வீட்டுக்கு வந்தவர் ,வீட்டு வாசலிலேயே தாகூர் இனத்தவர்களால் எந்திரத்துப்பாக்கி கொண்டு சுட்டுகொல்லப்பட்டார். இந்தப்படத்தில் தன்னை கேட்காமல் திரைப்படத்தில் சித்தரித்ததற்காக வழக்காடி 60,000 அமெரிக்க டாலர் நஷ்ட ஈடும் பெற்றார்.

1996 ஆம் ஆண்டு மிர்ஸாபூர் தொகுதியில்  சமாஜ்வாதி கட்சியில் மக்களைவைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1999ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசுக்கு கூட பரிந்துரைக்கப்பட்டார்.   ஜூலை 25, 2001 அன்று புது தில்லியில் உள்ள இல்லத்தில் இருந்து தன் காரில் ஏறி புறப்படும் சமயத்தில் ஆட்டோ ரிக்சாவில்   வந்த தாகூர் சாதி வெறியர்களால் சுடப்பட்டு மரணமடைந்தார் பூலான் தேவி.

ன்றும் இந்தியாவில் , கிராமிய சமூக சூழலில் சாதிய முரண்களும் நிலம் சார்ந்த சொத்துடமைகளும் அதி முக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன. இதற்கு உடனடி உதாரணமாக செப்டம்பர் 26- 2006 ஆம் ஆண்டு  நடந்த கெர்லாஞ்சி படுகொலையைச் சொல்லலாம். நாகபுரி அருகே கெர்லாஞ்சி கிராமம். அம்பேத்கரின் அதே மஹர் சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்திடமிருந்த ஐந்து ஏக்கரில் இரண்டு ஏக்கரை உயர் சாதியினர் நிலத்துக்கான சாலைக்காக முன்பே எடுத்துக்கொண்டார்கள். அடுத்து, மீதி நிலமும் தங்களுக்குப் பாசனக் கால்வாய்க்கு வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள். இதற்கு உடன்படாத குடும்பத்தினருக்கு ஆதரவாக இருந்தவர் சித்தார்த் என்ற உறவினர். அவருக்கும் குடும்பத் தலைவி சுரேகாவுக்கும் கள்ளத் தொடர்பு என்று சொல்லி, உயர் சாதியினர் அவரை அடித்தார்கள். அவர் போலீஸில் புகார் செய்ததில் 28 பேர் கைதானார்கள்.

அத்தனை பேரும் ஜாமீனில் வெளியே வந்த உடனே, ஊரையே திரட்டி, சுரேகா (45), மகள் பிரியங்கா (17) , மகன்கள் ரோஷன் (23), சுதிர் (21) நால்வரையும் மேல் சாதியினர் சுமார் 150 பேர் கூடிக் கொலை செய் தார்கள். இரண்டு பெண்களும் நிர்வாண ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டு, பலராலும் பாலியல் வன்முறை செய்யப்பட்டார்கள். அனைவருக்கும் பிறப்பு உறுப்புகளில் வெட்டு, சிதைப்பு. கொல்லப்பட்ட உடல்கள் ஊருக்கு வெளியே பல மூலைகளில் தூக்கி எறியப்பட்டன. இத்தனையையும் ஒளிந்துகொண்டு பார்த்த குடும்பத் தலைவர் பய்யிலால், போலீஸுக்கு போன் செய்தும் யாரும் வரவில்லை.மறு நாள்தான் போலீஸ் புகாரைப் பதிவு செய்தது. மருத்துவப் பரிசோதனையில் பாலியல் வன்முறை இல்லை என்று அப்பட்டமாக பொய் சொன்னதை, தலித் அமைப்புகள் கடுமையாக விமர்சித்தும் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை,போன உயிர் தாழ்த்தப்பட்ட சாதியினரின் உயிராதலால் கேள்வியே இல்லை.கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தலித் பெண் பிரியங்கா, ப்ளஸ் டூ.வில் முதல் இட மாணவியாம். என்.சி.சி. யில் வேறு சிப்பாயாக இருந்தாராம். சுதிர், பட்டதாரி. ரோஷன், பார்வையற்றவர் என்றாலும், ஓரளவு படித்தவராம்.கல்வியை நம்பி மேலே நகர்ந்து கொண்டு இருந்த ஒரு தலித் குடும்பம், அரசியல் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்திருந்த ஊர் மேல் சாதியினரால் நசுக்கப்பட்டது 21.ம் நூற்றாண்டில் தான்!  தலித்துகளுக்கு மட்டும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவேயில்லை என்று இதைப்படிக்கும் ஒருவருக்கு நிதர்சனமாக புரியும்.நாமும் இதே இந்தியாவில் தான் மிகவும் பாதுகாப்பாக வாழ்கிறோம்.

பிறக்கும் போது ஒருவர் கெட்டவர்களாக பிறப்பது இல்லை. அவர்கள் வளரும் சாதியச் சூழல் தான் அவர்களை நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ மாற்றுகிறது. இன்றைய பாரத சமுதாயத்தில் உள்ளவர்களை குற்றவாளிகளாக மாற்றுவதற்கு முக்கிய காரணமாக சாதிப் பிரிவினையும் சாதி அடக்கு முறையும் பெரும்பங்கு வகிக்கிறது. இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சாதிவெறியை ஊட்டாமல் சாதியை அவர்களிடமிருந்து மறைக்கவும், மறக்கடிக்கவும் பாடுபடவேண்டும். உலகசினிமா காதலர்கள் , சரித்திர ஆர்வலர்கள் மாணவர்கள் வாழ்வில் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது.

No comments:

Post a Comment