Saturday, October 8, 2011

நகுலன் கவிதைகள்

நல்ல கதைகளை படிக்கும்போதும், நுட்பமான உறவுகளை எடுத்து சொல்லும்
சினிமாக்களை பார்க்கும்போதும் அவை ஏற்படுத்தும் பாதிப்பு முழுவதுமாக
விலக சில நாட்கள் பிடிக்கும். இந்த உணர்வுகள் கதை, சினிமாக்களுக்கு
மட்டுமல்ல கவிதைகளுக்கும் உண்டு என்பது சில கவிதைகளை வாசிக்கும்
போது உணர முடியும். தற்செயலாக நகுலன் அவர்களின் கவிதை ஒன்றினை
ஆ.வியில் படித்தேன். படித்து முடித்த பிறகும் அதன் பாதிப்பு என்பது
என்னை விட்டு விலக வெகு நேரமாயிற்று.

Photobucket - Video and Image Hosting

பொதுவாக கவிதை என்பது எது என்ற புரிதலே இல்லாமல் நானும் சில
கவிதைகள் எழுதியிருக்கிறேன். பின்னாளில் நானே வாசிக்கும்போது அபத்தம்
போல தோன்றுவது மறுக்க முடியாத ஒன்று.

"நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த
வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது"


தன்னை பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும்போது, அவர்களிடம்
நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டுகோள் இதுதான். தமிழ் இலக்கியப்
பரப்பில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான இவர் தற்போது வசிப்பது திருவனந்த
புரத்தில், தனிமையில் வசிக்கிறார்.

Photobucket - Video and Image Hosting

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில்
எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை.தற்போது எழுதுவதை முற்றிலும்
நிறுத்திவிட்டார். தற்போது நகுலனின் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத்
தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

இனி அவரின் கவிதைகள்!

எந்தப் புத்தகத்தை
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது
அதை மீறி ஒன்றுமில்லை!


இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்!


என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!



வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!


எனக்கு
யாருமில்லை
நான்
கூட!

யாருமில்லா பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!


நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!


உன்னையன்றி
உனக்கு வெறு யாருண்டு?


ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்!


முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!


வந்தவன் கேட்டான்
"என்னைத் தெரியுமா?"
"தெரியவில்லையே"
என்றேன்.
"உன்னைத் தெரியுமா"?
என்று கேட்டான்.
"தெரியவில்லையே"
என்றேன்.
"பின் என்னதான் தெரியும்"
என்றான்.
"உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்"
என்றேன்!


எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கு
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!




இதிலும் சில கவிதைகள் புரியாததுபோல தோன்றினாலும் எல்லாமே ஆழமான
அர்த்தங்கள் கொண்டவை.

1 comment: