Tuesday, April 19, 2011

109. ஆணிப்பொன்னம்பலக் காட்சி ( Audio )


ஆறாம் திருமுறை
Download
( 4914 )
ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சிய டி - அம்மா
அற்புதக் காட்சிய டி
( 4915 )
ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
வீதிஉண் டாச்சுத டி - அம்மா
வீதிஉண் டாச்சுத டி ஆணி
( 4916 )
வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு
மேடை இருந்தத டி - அம்மா
மேடை இருந்தத டி ஆணி
( 4917 )
மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
கூடம் இருந்தத டி - அம்மா
கூடம் இருந்தத டி ஆணி
( 4918 )
கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
மாடம் இருந்தத டி - அம்மா
மாடம் இருந்தத டி ஆணி
( 4919 )
ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
என்னென்று சொல்வன டி - அம்மா
என்னென்று சொல்வன டி ஆணி
( 4920 )
ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா
சீர்நீலம் ஆச்சுத டி ஆணி
( 4921 )
பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
பவளம தாச்சுத டி - அம்மா
பவளம தாச்சுத டி ஆணி
( 4922 )
மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
மாணிக்கம் ஆச்சுத டி - அம்மா
மாணிக்கம் ஆச்சுத டி ஆணி
( 4923 )
பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
பேர்மணி ஆச்சுத டி - அம்மா
பேர்மணி ஆச்சுத டி ஆணி
( 4924 )
வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
வெண்மணி ஆச்சுத டி - அம்மா
வெண்மணி ஆச்சுத டி ஆணி
( 4925 )
புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
பொன்மணி ஆச்சுத டி - அம்மா
பொன்மணி ஆச்சுத டி ஆணி
( 4926 )
பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
படிகம தாச்சுத டி - அம்மா
படிகம தாச்சுத டி ஆணி
( 4927 )
ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
இசைந்தபொற் றம்பம டி - அம்மா
இசைந்தபொற் றம்பம டி ஆணி
( 4928 )
பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட
புதுமைஎன் சொல்வன டி - அம்மா
புதுமைஎன் சொல்வன டி ஆணி
( 4929 )
ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
என்னள வல்லவ டி - அம்மா
என்னள வல்லவ டி ஆணி
( 4930 )
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
ஆகவந் தார்கள டி - அம்மா
ஆகவந் தார்கள டி ஆணி
( 4931 )
வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
வல்லபம் பெற்றன டி - அம்மா
வல்லபம் பெற்றன டி ஆணி
( 4932 )
வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
மணிமுடி கண்டேன டி - அம்மா
மணிமுடி கண்டேன டி ஆணி
( 4933 )
மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
மற்றது கண்டேன டி - அம்மா
மற்றது கண்டேன டி ஆணி
( 4934 )
கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
கோயில் இருந்தத டி - அம்மா
கோயில் இருந்தத டி ஆணி
( 4935 )
கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில்
கூசாது சென்றன டி - அம்மா
கூசாது சென்றன டி ஆணி
( 4936 )
கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள்
கோடிபல் கோடிய டி - அம்மா
கோடிபல் கோடிய டி ஆணி
( 4937 )
ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
ஐவண்ணம் ஆகும டி - அம்மா
ஐவண்ணம் ஆகும டி ஆணி
( 4938 )
அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்
அப்பாலே சென்றன டி - அம்மா
அப்பாலே சென்றன டி ஆணி
( 4939 )
அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில்
ஐவர் இருந்தார டி - அம்மா
ஐவர் இருந்தார டி ஆணி
( 4940 )
மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
மணிவாயில் உற்றேன டி - அம்மா
மணிவாயில் உற்றேன டி ஆணி
( 4941 )
எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக
இருவர் இருந்தார டி - அம்மா
இருவர் இருந்தார டி ஆணி
( 4942 )
அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
அன்பொடு கண்டேன டி - அம்மா
அன்பொடு கண்டேன டி ஆணி
( 4943 )
அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
அம்மை இருந்தாள டி - அம்மா
அம்மை இருந்தாள டி ஆணி
( 4944 )
அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேன டி - அம்மா
அமுதமும் உண்டேன டி ஆணி
( 4945 )
தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
சந்நிதி கண்டேன டி - அம்மா
சந்நிதி கண்டேன டி ஆணி
( 4946 )
சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
சாமி அறிவார டி - அம்மா
சாமி அறிவார டி
ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சிய டி - அம்மா
அற்புதக் காட்சிய டி
Download

No comments:

Post a Comment