Friday, November 4, 2011

நவீன ஓவியம் -எஸ். ராமகிருஷ்ணன்

சில கேள்விகள்.  சில விளக்கங்கள் – ஜோசப் ஜேம்ஸ்

மறைந்த பேரா. திரு. ஜோஸப் ஜேம்ஸ் இந்திய முன்னணி ஓவிய விமர்சகர்களில் ஒருவர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் முக்கியமான ஓவியப் பத்திரிக்கைகளில் இவர் விமர்சனங்களும் கட்டுரைகளும் வெளியாகி இருக்கின்றன.

நவீன ஓவியம் ஏன் புரியவில்லை. ?

உங்களுக்கு மரபு ஓவியம் புரிகிறதா என்று ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு சிலருக்கும் மட்டுமே அதன் தத்துவமும், கோட்பாடும் தெரிந்திருக்கின்றன. நீங்கள் சொல்லக்கூடியதெல்லாம், மரபு ஓவியம் உங்களுக்குப் பரிச்சயமானது என்பதுதான். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதல்ல. நவீன ஓவியத்துடன் நமக்குப் பரிச்சயமில்லை. உண்மையில் அதுதான் பிரச்சனை.

மரபு ஓவியத்துடன் எவ்வளவு பரிச்சயப்பட்டிருக்கிறீர்களோ அவ்வளவு பரிச்சயத்தை நவீன ஓவியத்துடன் ஏற்படுத்திக் கொண்டால் இப்பிரச்சினை மறைந்து போகும். அப்படியும், நீங்கள் அதைப் புரிந்து கொண்டவர்களாகிவிட மாட்டீர்கள். அதை நாம் விமர்சகர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் விட்டு விடுவோமே.

இந்த நவீன ஓவியத்தைக் குழந்தைகள் கூட வரையலாம் போலிருக்கிறதே ?

இது உண்மையில்லை. பிகாசோ மாதிரி வரையக்கூடிய, அல்லது சகால் (Chagall) மாதிரி வண்ணம் இடக்கூடிய ஒரு குழந்தையைக் காட்டுங்கள் பார்ப்போம். ஆனாலும், குழந்தைகள் மாதிரி ஓவியம் வரைய முயலும் ஒவியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது ஏனென்றால். குழந்தைகள் எப்படி அழகாகப் புன்னகைக்கிறார்களோ, பேசுகிறார்களோ, அம்மாதிரியே அழகாக வரைகிறார்கள்., வண்ணமிடுகிறார்கள்.

பால்க்ளி (Paul Klee) போன்ற ஓவியர்கள் இதைச்  செய்கிறார்கள். ஆனால் இது முனைந்து செய்வது; முன்கூட்டிய யோசனையின் விளைவாகச் செய்வது. இப்படிச் செய்வது குழந்தைகளின் இயல்பல்ல. அவர்களால் அப்படி இருக்கவும் முடியாது.

அங்கங்கே வண்ணத் திட்டுகள், இங்கே ஒரு கோடு, அங்கே ஒரு கோடு என்றிருக்கும் ஓவிய்த்தை மனதில் கொண்டு, குழந்தைத் தனமான ஓவியம் என்று சொல்வீர்களேயானால், இது குழந்தைகள் செய்யக்கூடியதுதான். 

ஆனால் ஆச்சரியம்  என்னவென்றால், குழந்தைகள் இம்மாதிரி வரைய முனைவதில்லை, விரும்பவதில்லை (அவர்கள் தங்கள் கற்பனைக்குகந்த படங்களைத்தான் வரைகிறார்கள்). ஹார்ப்மன் (Hoffman), போல்லக் (Pollook) போன்ற ஓவியர்கள் இம்மாதிரிச் செய்ய விரும்புகிறார்கள் . படங்களை  வரையக்கூடிய ஓவியர்கள், ஏன் குழந்தைகள் செய்யக்கூடிய, ஆனால் செய்ய விரும்பாத ஒன்றைச் செய்ய விரும்புகிறார்கள்? .

இந்தப் புதிரை விடுவிக்க முயலுங்கள். இது  உங்களை நவீன ஓவியத்திற்கு இட்டுச் செல்லும்.

நவீன ஓவியத்தை விளக்க முடியுமா?

முடியாது. கர்நாடக இசையை விளக்க முடியுமா? முடியாது. அதை நீங்கள் ரசிக்கத்தான் முடியும். அதே போலத்தான் நவீன ஓவியமும். ஏன், எல்லாக் கலைகளூம்தான். இவற்றை ரசிக்கக்கூடிய அளவிற்கு, ஒருவருக்கு உதவலாம்; ஒருவரைப் பயிற்றுவிக்கலாம். ஆனல் இதற்கு முயற்சியும் கட்டுப்பாடும் தேவை. அதற்குப் பிறகு நீங்களாகவேதான் இதில் ஈடுபடவேண்டும்.

ஒரு தத்ரூபமான படத்தைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது, புரிகிறது. ஆனால் நவீன ஓவியத்தைப் பார்க்க்ம்போது ஒன்றுமே தோன்றுவதில்லையே, புரிவதும் இல்லை. ?

ஒரு தத்ரூபமான படம் நாம் ‘படிக்கக்’ கூடியது. இது காது, இது இடதுகை, இது ஒரு கிளை, இது ஒரு பெண், இதுதான் அவர்கள் செய்வது என்பது போல். நம்மால் இப்படி புரிந்து கொள்ள முடிவதற்குக் காரணம், ஒரு படம் நமக்குத் தெரிந்த அல்லது நாம் யூகிக்க்கூடிய ஒரு படிமத்தை அல்லது ஒரு கதையைக் கொண்டிருப்பதும் அல்லது அதைச் சார்ந்திருப்பதும் ஆகும்.

நவீன ஓவியம் இப்படி இந்த முறையில் ‘படிக்க’ கூடியது அல்ல. ஏனென்றால் இம்மாதிரிப் படிமங்களையோ அல்லது கதைகளையோ அது ஒத்திருப்பதில்லை. அது சம்பந்தப்படுத்துவது, அடிப்படையாகக் கொண்டிருப்பது, நாம் எதைப் பார்க்கிறோம், கற்பனை செய்கிறோம் என்பதல்ல; 

மாறாக, நாம் பார்க்ககூடிய விதங்கள் , கற்பனை செய்யக்கூடிய விதங்கள் ஆகியவற்றைத்தான். அடிப்படையில் இது நம்முள் இருக்கும் உள்ளார்ந்த, ஆழமான ஒழுங்குணர்ச்சியைக் கொண்டது,


இதுதான் நம்மால் பார்க்க, கற்பனை செய்ய, உருக்கொடுக்கக் காரணமாக இருக்கிறது. இந்த மாதிரி பார்க்கவும், உணரவும் நமக்கு ஊடுருவிப் பார்க்ககூடிய திறமை, முயற்சி தேவைப்படுகின்றன. ஒரு தத்ரூபமான படம், இதற்கு மாறாக, நமக்கு மிக நெருங்கியது; ஒரு கதை சொல்லும் – கேட்கும் விதத்தில் உடனடியான நேரிடைத் தன்மை கொண்டது.

நவீன ஓவியம் ஏன் தேவைப்படுகின்றன?

ஏனென்றால், நம்மைப்பற்றியும், உலகைப் பற்றியும் சொல்ல இருக்கும் எல்லாவற்றையும் சொல்ல கதை-முறை, விவரனை முறை போதாது என்பதைத் தெரிந்து கொண்டதால்.

கதை-முறை, விவரணை-முறை ஏன் போதாது?

முன்பு எப்போதையும் விட, கடந்த நூறாண்டுகளில் அறிவு மிக வேகமாக, பரவலாக வளர்ந்து விட்டது. பல்வேறு துறைகளில் உளவியல், பௌதிக விஞ்ஞானங்கள், இயற்கையியல், சமூகவியல் 
முதலியவற்றில் உண்டான கருத்தங்கள், கோட்பாடுகள் மனிதனைப்பற்றி, வாழ்க்கையைப் பற்றி புதிதான தெளிவை உண்டாக்கியிருக்கின்றன. இவை நம் வாழ்க்கையை, சிந்தனையை தீவிரமாகப் பாதித்து, நம் அன்றாடச் சிந்தனையிலும் ஊடுருவி, கலந்து விட்டன.

இவை கலையிலும் 
பொதுப்படையான அணுகுமுறையையும், பாத்திரப்படுத்தலையும் தவிர்க்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கி விட்டன. இதனாலேயே கதை முறை, விவரணை முறை சிக்கல் மிகுந்த இன்றைய 
வாழ்க்கையை எடுத்துச் சொல்லப் போதுமானதாக இல்லை.

நவீன ஓவியம் நம் கலாச்சாரத்தைச் சேர்ந்ததில்லை , இந்த ஓவியர்களெல்லாரும் மேற்கத்திய கலாசாரத்தைச் சாயல் பிடிக்கத்தானே செய்கிறார்கள்?

தத்ரூப ஓவியத்திற்கும் நவீன ஓவியத்திற்குமுள்ள வேறுபாட்டை நினைவில் கொள்ளுங்கள். 

தத்ரூப ஓவியம் விவரணை-முறையைச் சார்ந்திருக்கிறது. நவீன ஓவியம் நம்முடைய ஒழுங்குணர்சியைச் சார்ந்திருக்கிறது. நவீன ஓவியம் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாதது என்று சொல்வது, நம் கலாச்சாரத்திற்கு ஒழுங்குணர்ச்சியைப் பற்றிய அக்கறை இல்லை என்பதாகும். இது தவறு. இந்திய மரபு ஓவியம் விவரணை முறையை, கதை சொல்லும் முறையை 
மிகக் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறது.

ஆனால் இந்த விவரணை முறையைக் கையாண்ட கவிதையிலும், சிற்பங்களிலும், சிற்றோவியங்களிலும் (Miniatures) மிகக் தேர்ந்த, பண்பட்ட ஒழுங்குணர்ச்சி இருந்திருக்கிறது.

இதை மிகத் தெளிவாகவே மரபுத் தொழிற்கலைகளில் காணலாம். நகைகள், துணி டிசைன்கள், உலோகப் பண்டங்கள், தமிழ் 
நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் பெண்கள் நினைவிலிருந்து வரையும் கோலங்கள் ஆகியவற்றில் இவற்றைப் பார்க்கையில், நம்முள் இருக்கும் ஒழுங்குணர்வை நாடும் நவீனத்துவம் நம் கலாச்சாரத்தைச் சார்ந்ததல்ல என்று சொல்ல முடியாது.

நவீன ஓவியம் ஒரு தீவிரமான கலைச்சாதனம் என்றால் அதை உருவாக்குவோரும், ரசிப்பவர்களும் மிகச் சொற்பம்தானே. அதாவது, இது ‘மேட்டுக்குடித்தனமையை’ உடையதுதானே. சாதாரண மக்களுக்கு இதனால் என்ன லாபம்?

இந்திய நவீன ஓவியம் இன்று படைக்கப்படுவதும், ரசிக்கப்படுவதும் சிறு குழுவினர் மத்தியில் என்பது உண்மை. ஆனால் இந்த மாதிரியான கலை நம் கலாச்சாரத்திற்குப் புதிது.

கலையிலும் சரி, விஞ்ஞானத்திலும் சரி, எந்தப் புதுமாற்றமுமே வெகுஜன அளவில் துவங்குவதில்லை. கலாச்சாரத்தின் எந்தப் புதிய அம்சமும் ஒரு சிலர் மத்தியிலே உருவாகிறது. அந்த அர்த்தத்தில் வேண்டுமானால், கலாசாரத்தில் உருவாகும் மாற்றம் மேட்டுக்குடியினரைச் சார்ந்தது என்று சொல்லலாம். இந்த மாற்றம் பரவ, கலாச்சாரத்தை மாற்ற, காலமும், புதிய உணர்வுக்கூறுகளுக்குத் தேவையான உந்துதலும் அவசியமாகின்றன.
சாதாரண மனிதன் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஒரு புதிய அம்சத்தைச் சேர்க்கும்போதுதான் கலை அவனைச் சென்றடைகிறது. அவனுடைய துணிமணிகள், வீடுகள், மேஜை நாற்காலிகள், பாத்திரங்கள், இந்தியாவில் நவீன ஓவியம் இவற்றையெல்லாம் பாதித்திருப்பதாகப் பொதுவாகச் சொல்ல முடியாது.


இருந்தாலும் இன்றைய துணிகள், கட்டிடடக் கலை, உட்புற அலங்காரம், நகர்புற விளம்பரச் சாதனங்கள் முதலியவற்றைக் கவனியுங்கள். உங்களால் ஏதாவது ஒரு புது ஒழுங்குணர்ச்சியைக் காண முடிகிறது. 

இப்படித்தான் நவீன ஓவியம் சாதாரண மனிதனைச் சென்றடைகிறது.

நவீன ஓவியத்தை எப்படி ‘அனுபவிப்பது’?

ஒரு விஷயம் உங்களைத் தொட நீங்கள் அனுமதித்தாலன்றி எதையும் உங்களால் அனுபவிக்க முடியாது. நிறைய நவீன ஓவியங்களைப் பாருங்கள், அவற்றில் பல உங்களுடைய ஆர்வத்தைத் தூண்டாமலிருக்கலாம் பல உங்களுக்கு சுவாரஸ்யமின்றி இருக்கலாம். ஆனால் நிச்சயம் சில 
உங்களுக்குப் பிடிக்கும்.

இவற்றைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை தெரிந்து கொள்ள முயலுங்கள். யாரையாவது கேளூங்கள், ஒரு புத்தகம் படியுங்கள். அந்த ஓவியரையோ 
சிற்பியையோ புரிந்து கொள்ள முயலுங்கள். உங்கள் ஆர்வத்தையும் அக்கறையையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். விரைவிலேயே நீங்கள் இன்னும் அதிகமாகப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் விரும்புவீர்கள்.

இசையை, நாட்டியத்தை, நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால் இம்மாதிரியான முயற்சியைத்தானே மேற்கொள்வீர்கள்.

நவீன ஓவியம் பார்வையாளர்களிடமிருந்து அதிக மனமுயற்சியை வேண்டுகிறதல்லவா?

ரசிப்பதற்கு முயற்சி தேவையில்லை என்பது அடிப்படைத் தவறு. நீங்கள் ஒரு விஷயத்தை ரசிக்கும்போது , சற்று கூர்ந்து பார்த்தால் நீங்கள் அந்த விஷயத்திற்காகத் தயாராக இருப்பதும், ஏன், சில நேரங்களில், அதை உணரவும், அந்த உன்னதத்தை அனுபவிக்கப் பயிற்சி பெற்றிருப்பதும் புலப்படும்.

எதிலும் உன்னதத்தைக் காண உழைப்பும், தன்னைச் 
சாதனப்படுத்திக் கொள்வதும் தேவையாகின்றன. நவீன ஓவியமும் இதற்கு விதிவிலக்கல்ல.

நவீன ஓவியத்திற்காக நீங்கள் அதிக உழைப்பை, முயற்சியை மேற்கொள்ள வேண்டுமா என்பது, அது உங்களை எவ்வளவு தூரம் தொட்டிருக்கிறது என்பதைப் பொருத்தது. அது உங்களைத் தொடாமல், நீங்கள் நவீனமாகத் தோற்றமளிக்க முற்பட்டால், அந்த பாவனை, நடிப்பு எளிதில் 
கைக்கூடாததாகவும் மிகக் களைப்பைத் தருவதாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

நவீன ஓவியத்திற்கு, தத்ரூப ஓவியத்தைப் போல, நிச்சயமான, விசாலமான அர்த்தம் உண்டா?

முதலில் கவனிக்கப்பட வேண்டியது, தத்ரூப ஒவியத்திற்கு வரையறுக்கப்பட்ட , ஸ்தூலமான அர்த்தம் இல்லை என்பது. ஒரு தத்ரூபமான படத்தைப் ‘படிக்க’ முடியும். அதில் ஒவ்வொன்றும் இன்னதென்று தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அதனாலேயே அந்த ஓவியம் மொத்தத்தில் என்ன சொல்கிறது, எதை வெளிப்படுத்துகிறது என்று சொல்ல முடியுமா?

 ஒரு கவிதையில் ஒவ்வொரு சொல்லும் எதைக் குறிக்கிறது என்று ஒருவேளை கூற முடியும். அதனாலேயே அந்தக் கவிதை மொத்தமாக என்ன சொல்கிறதென்று புரிந்து கொண்டாற்போல் ஆகுமா?

அப்படியே இருந்தாலும் அதுதான் அதனுடைய வரையறுக்கப்பட்ட, ஸ்தூலமான, திட்டவட்டமான அர்த்தம் என்று கூற முடியுமா? முடியாது. ஒரு கவிதை எதைப் பற்றியது, அதன் பொருள் என்ன என்பது பல நேரங்களில் ஒரு உணர்ச்சி, மனதில் ஒரு நிலை என்றாகும்போது இவை 
ஸ்தூலமானவை அல்ல, நிர்ணயிக்கப்பட்டவையும் அல்ல.

ஒரு ஓவியத்தைப் படிக்க முடிந்தாலும், அதன் அர்த்தம் ஸ்தூலமானதல்ல. நவீன ஓவியம், தத்ரூப ஓவியத்தைப் போல படிக்கக்கூடியது 
அல்ல என்பதாலேயே அதன் அர்த்தம் இன்னும் அதிக அளவில் நிர்ணயிக்க இயலாத தன்மையைக் கொண்டது. இந்தத் தன்மைதான் நவீன ஓவியத்திற்கு அதிக சுதந்திரத்தையும், வீச்சையும் தருகிறது.

நவீன ஓவியத்தைப் பற்றிய ரசனையை எப்படி வளர்த்துக் கொள்வது?

முதலில் நவீன ஓவியத்தை உங்களுக்குள் வாங்கிக்கொள்ள உங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு உதவியாக முதலில் உங்கள் தாய்மொழியில் உள்ள நவீன இலக்கியத்தைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளலாம். இது நவீன உணர்வுக்கூறு அல்லது நவீன மனப்பாங்கு பற்றிய பிரக்ஞையைத் தரும்.

இரண்டாவதாக , உங்ளுக்குப் பரிச்சயமான மரபு ஓவியத்தில் 
அதிக கவனம் செலுத்தலாம்.

இப்படிச் செய்வது அதைப் பற்றிய விமர்சன பூர்வமான பார்வையை 
வளர்த்துக் கொள்ள உதவும். மூன்றாவதாக, நவீன ஓவிய படைப்பாளர்களைப் பற்றிய நேரடியான பரிச்சயத்தை உண்டாக்கிக் கொள்வது.

இர்விங் ஸ்டோனின் (Agony and Ecstacy – மைக்கலாஞ்சலோ பற்றிய புத்தகம்) , Lust for Life ( வான்கோ – Van Gogh பற்றியது), சாமர்செட் மாமின் Moon and Six Pence ( கொகான் – Gaugin பற்றியது) முதலிய புத்தகங்கள் நவீன ஓவியத்தைப் பற்றி, ஓவியர்களைப் பற்றி நேரிடையான மனித பூர்வமாகப் 
புரிந்து கொள்ள உதவும். இவையனைத்தும் நவீன ஓவியத்திற்கு நம்மைத் தயார் செய்யும். 

இந்த இடத்திலிருந்து மேலே தொடர்ந்து போவது ஒருவனுடைய ஆர்வத்தையும், புதிய அனுபவங்களுக்கான வேட்கையையும் பொருத்தது.

நிச்சயமான அர்த்தம் ஒன்று சாத்தியமில்லை என்பதால் நவீன ஓவியத்தில் போலிகள் தோன்ற வாய்ப்பு உண்டல்லவா?

நவீன ஓவியம் படிக்கப்படக் கூடியதல்ல என்பதால், அத்தன்மையைப் போர்வையாகக் கொண்டு போலிகள் உருவாக வாய்ப்பு உண்டு. இதற்கெதிராக ஒரே பாதுகாப்பு, நவீன ஓவியத்தைப் பற்றிய பரவலான அறிவும் அக்கறையும், தொடர்ந்து ஓவியங்களைப் பார்ப்பதன் மூலம் பயிற்சி 
அடைவதும்தான்.

*** 
நன்றி : ஆபிதீன் பக்கங்கள் :’க்ரியா’, திரு. ஜோஸப் ஜேம்ஸ் 

***

வான்கோ, பிகாசோ, டாலி,  பால் காகின், பிரைடா காலோ உள்ளிட்ட பத்து முக்கிய நவீன ஒவியர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் நான் எழுதிய சித்திரங்களின் விசித்திரங்கள் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உயிர்மை ஆன் லைனில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

http://www.uyirmmai.com/Publications/Books.aspx

Thursday, November 3, 2011

Pan Nalin (Personal Quotes)

Acting is an act of self realization but in an other self then yours.


Working with actors is to understand non-actor within them. Working with non-actors is to understand actor within them.


If Cinema is a manifestation of our life than keep dialogs to minimum or avoid the over-use. Ninety percent of our life we spend in silence, we live in silence.


Invention of the tripod was the best thing that happened to the photography and worst to the cinematography.


We all meet to celebrate life and depart to create memories.


Image is seen by eyes. Sound is seen by mind. Together the images they form are seen by soul.


Do not act to tell stories but act to create a true-self. All true-self have true stories tell.


One and only instruction to actors: Do Not Act.


To my cinematographer friends: one of the best quality of light is to travel through clouds... use it, life is not only sunshine!


Children are like animal and animal are like children. If by nature, you do not posses qualities to be patient then never cast them.


Feeling is seeing. Feeling makes process of seeing complete.


Do not tell divine stories with human camera angles.


Time, sometime, exists just off the frame because there is Space!


If light is space and form then darkness is time. When we watch movies, sixty percent of the story is told by light and forty percent is by darkness.


Lighting creates gravity, darkness creates anti-gravity. Correct combination of both could create time.


Anti-gravity image is lighter. Tripod is 'heavy' for the image as it creates right-side-up notions. As a kid half the world I saw was upside down.


Image is light but cinematic images are light and darkness. So, do not light the scene, light the darkness.


Empty the frame, because void is to be filled (maybe with mind). Void is nothingness. Nothing is Zero (Shunyata) but add zero to any number and its power increases tremendously. Add "void" to actors, spaces and time to enhance their power.


Empty the frame, cause presence of 'someone' or 'something' lies in its absence. Make absence presence.

Wednesday, November 2, 2011

பார்க்க வந்த இலை -எஸ். ராமகிருஷ்ணன்

என்னைப்பார்க்க ஒரு வாசகர் வந்திருந்தார். அவர் கையில் எங்கோ வழியில் பறித்த ஒரு இலையிருந்தது. பச்சை நிறத்தில் அகலமான இலை. அவர் சுவாரஸ்யமாக இலக்கியத் தகவல்களை பேசிக் கொண்டேயிருந்தார். எனக்கோ அந்த இலையிடமிருந்து கவனத்தை அகற்ற முடியவில்லை. எவ்வளவு பசுமை. எவ்வளவு அழகு.

அந்த இலை ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறது. இந்த நிமிசம் முன்பு வரை எங்கிருந்தது அந்த இலை. எந்த செடியின் இலையது. நான் அதை இதுவரை கண்டதேயில்லையே. எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறது. என்ன பேச விரும்புகிறது. அல்லது எதைக் கற்றுத் தர வந்திருக்கிறது
இதைத் தற்செயல் என்று எடுத்துக் கொண்டு எளிதாகக் கடந்து போய்விட வேண்டும் தானா? நான் இலையைப் பார்ப்பதை அறிந்த நண்பர் அதை என்னிடமே தந்தார். அவர் எதற்காக அந்த இலையை பறித்தார் என்று தெரியவில்லை. பொதுவாக பதற்றத்தை மறைத்துக் கொள்ள விரும்புவோர் எதையாவது பறிப்பது, கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருப்பது போன்றவற்றை செய்வார்கள். நண்பருக்குள்ளும் அப்படியான பதற்றம் இருந்திருக்க கூடும்.

நான் இலையை கைகளில் வைத்து பார்த்தபடியே இருந்தேன். என்னவொரு வடிவமைப்பு. ஒரம் கிழிந்திருப்பது கூட அழகாகத் தானிருக்கிறது. உலகில் கோடிக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒரு விநோத அழகு. ஏன் எதையும் நாம் ரசிக்க பழக்கவேயில்லை. நம்மோடு தொடர்பற்றது என்று எதற்காக நினைக்கிறோம்.

இலையின் பின்பக்கத்தைப் புரட்டிப் பார்த்தேன். அடர்த்தியாக நரம்புகள் ஒடுகின்றன. ஒரு நரம்பு பருத்துப் புடைத்திருக்கிறது. சிறுசிறு புள்ளியாக நிறமிகள் காணப்படுகின்றன. பள்ளிநாட்களில் இது போன்று இலைகளை நோட்டில் வைத்து உலரவைப்பேன். பசுமை காய்ந்து போய் இலை மிக மிருதுவாகிவிடும். வரைந்த ஒவியம் ஒன்றைக் கையில் எடுப்பது போன்றிருக்கும்.

கவிஞர் எமிலி டிக்கன்சன் தனக்கு விருப்பமான அத்தனை செடிகளின் இலைகளையும் சேகரித்து உலர வைத்து அதைத் தனது பொக்கிஷமாக பாதுகாத்து வந்தாள் என்று படித்த நினைவு.

இந்த இலைக்கு எத்தனை வயசிருக்கும். இலையை வைத்து செடியின் வயதைக் கண்டு சொல்ல முடியுமா. இலை என்று யார் கச்சிதமான பெயரை அதற்கு வைத்தது.

செடியை விட்டு வந்த பிறகு இதற்கு காற்றோடு என்ன உறவிருக்கும்.

பொதுவில் இலைகள் காற்றைக் கண்டு பயப்படுகிறதா. அல்லது காற்றை கண்டதும் உற்சாகம் கொள்கிறதா?

இலைகள் ஒடுங்கி நிற்பதை சில வேளைகளில் கண்டிருக்கிறேன். அடிவாங்கி அழுது அடங்கிய சிறுமிகளின் முகபாவத்திற்கு ஒப்பானது அது.

காற்று எவ்வளவு ஆவேசப்பட்டால் அதனால் பசுமையான ஒரு இலையை செடியிடமிருந்து பறித்துவிட முடியாது .

இலைகள் எப்போதுமே துள்ளுகின்றன. தன் பசுமையை காட்டிக் குதூகலம் கொள்கின்றன. என் கையில் ஒரு இலை வந்தவுடனே வயது கரைந்து போவதை உணர துவங்கினேன். அதை ஒரு சிறுவனை போல ஆட்டிக் கொண்டேயிருந்தேன். எவ்வளவு உற்சாகம். மனம் ஏன் இப்படி சிறுவிசயங்களில் இத்தனை லயப்பு கொள்கிறது.

நண்பர் தீவிரமாக இலக்கிய சச்சரவுகள், வம்புகள் பற்றி பேசிக் கொண்டேயிருந்தார். இலை என் கண்முன்னே வாடத்துவங்கியிருந்தது. உலகின் எந்த சக்தியாலும் இனி அதன் பசுமையைக் காப்பாற்ற முடியாது. இலை வாடுகிறது என்று நண்பர் சொன்னார்.

எவ்வளவு எளிய வாசகம். ஆனால் எவ்வளவு பெரிய துயர். மனித முயற்சிகள் அத்தனையும் ஒன்று கூடினாலும் ஒரு சிறிய இலையை அதன் வாடுதலில் இருந்து இந்த நிமிசம் காப்பாற்ற முடியாது தானில்லையா. நான் அமைதியாகப் பார்த்து க்கொண்டிருந்தேன்.

பூக்களின் நறுமணத்தை தான் யாவருமே ரசிக்கிறார்கள். அதன் முணுமுணுப்பை ஒருவருமே கேட்பதில்லை என்று குட்டி இளவரசன் நாவலில் சொல்வதாக ஒரு நினைவு.

நாம் இயற்கையைப் பிரித்து நமது புலன்கிளர்ச்சிக்கு ஏற்ப அறிந்து கொள்கிறோம். வாசனையிருப்பதும் இல்லாதிருப்பதும் அதனதன் தனித்துவம். இயல்பு. ஒரு மரத்தில் உள்ள இலைகள் யாவும் ஒன்று போல இருப்பதாக அவை நம்மை நம்ப வைக்கின்றன. அது நிஜமில்லை.

இலை ஒரு சிறிய கனவைப் போலிருக்கிறது.

இலை காற்றின் உதிர்ந்த சிறகைப்போலிருக்கிறது.

இலை ஒரு குறுஞ்சிரிப்பைப் போலிருக்கிறது.

இலை ஒரு இலையைப் போலவே இருக்கிறது.

மனம் அதன் மீது படிந்து நகர மறுக்கிறது. நண்பர் விடைபெற்றுப் போய்விட்டார்.
ஆனால் அந்த இலை வெயில் தாளமல் வாடி மடங்கி துவண்டு போயிருந்தது. ஆழமான துக்கமும் வலியும் மனதில் ஒரு முறை எழுந்து அடங்கியது.

வாழ்வு குறித்த ஏதோ ஒரு பெரும் உண்மையின் துளியை நாவில் உணர்ந்தைப் போலிருந்தேன்.
இனி அந்த இலையை என்ன செய்வது. மேஜையில் வைத்திருந்தேன். பாதியில் முறிந்த நட்பைப் போல அதைக் காண

மனது என்னவோ செய்து கொண்டிருந்தது.

அறையை விட்டு நான் வெளியேறினேன்.

என்ன செய்ய, என்னால் அது தானே முடிகிறது.

***

Source :
http://www.sramakrishnan.com/?p=1955

ஜென் கவிதைகள் -எஸ். ராமகிருஷ்ணன்


தொடர்ந்து சில வாரங்கள் ஜென் கவிதைகளாக வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஜென் கவிதை குறித்து என் மனதில் தோன்றிய குறிப்புகள் இவை.


ஜென் கவிதைகள் இயற்கையை கடந்த காலத்தில் வைத்து பார்ப்பதில்லை. நாம் ஒரு மலையை அருவியை சந்திக்கும் போது இந்த கணம் என்ற மட்டுமே நம்மோடு இருக்கிறது. அருவிக்கு கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் யாவும் இக்கணமாகவே வெளிப்படுகிறது. அதை தான் ஜென் கவிதைகள் தன் கவிதைகாலமாக முன்வைக்கின்றன

கவிதையில் வரும் மலை தன்  வருசத்தை இழக்கிறது. இயற்கையின் புராதன தன்மையை ஜென் கவிதை மாற்றுகிறது. நிசப்தம் மலையின் வடிவமாக சுட்டப்படுகிறது. மலை ஒரே செயலின் இயங்கா நிலையாகவும் மாறுகிறது. எனில் மலை என்பது வெறும் காண்பொருள் இல்லை

ஜென் கவிதைகள் எப்போதுமே அனுபவத்தின் முடிவின்மையை சுட்டுகிறது. 

ஜென் கவிதைகள் தரும் மெய்தேடல் சுய அனுபவத்தை விட இயற்கையை தன் ஊடகமாக கொள்கிறது.  ஜென் காட்டும் மேகம் ஆகாசத்தில் இல்லை. அது ஒரு நகர்வு. அது ஒரு தொடர் இயக்கம் அவ்வளவே. அறிவு தரும் நினைவுறுத்தலை ஜென் மறுக்கிறது. இதில் கடல் வானத்தில் இருக்கலாம். மலை தரையில் ஊர்ந்து போகலாம்.

ஜென் கவிதைகள் தரும் அனுபவம் பெரிதும் சுயநிகழ்வுகள் அற்றது. ஒருவகையில் அன்றாட நிகழ்வுகளின் சாரமாக உள்ள தன்னிருப்பு மற்றும் அது மாறும் தருணங்களை மட்டுமே பதிவு செய்கிறது. 

ஜென் கவிதைகளை வாசிப்பதற்கு ஒவியங்களின் பரிச்சயம் அவசியம் என்று தோன்றுகிறது. ஒவியங்களை நுட்பமாக ரசிக்க தெரிந்தவனுக்கு ஜென் கவிதைகளின் ஆழம் எளிதில் புரிந்துவிடும். 

எளிய வாசகன் முன் உள்ள பிரச்சனை அவன் கவிதைகளை அதன் அர்த்தம் மற்றும் சமூக தொடர்பு சார்ந்து  பெரிதும் வாசிப்பது. அவன் கவிதையை வழியாக அர்த்ததை உற்பத்தி செய்து கொள்ளவும் அதை பகிர்ந்து அளிக்கவுமே பெரிதும் முயற்சிக்கிறான். 

கவிதையோ சொற்களை அதன் பயன்பாட்டு தளத்திலிருந்து உயர்த்தியோ விலக்கியோ இன்னொரு பொருளை, இன்னொரு புரிதலை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.

உதாரணத்திற்கு தேவதச்சன் கவிதை  ஒன்றில் மத்தியானம் என்ற சொல் மத் தியானம் என்று இரண்டாக பிரிக்கபட்டு பயன்படுத்தபடுகிறது. இந்த துண்டித்தல் இதுவரை நான் அறியாதபடி மத்தியானத்தின் நீண்ட தனிமையை அதன் ஆழ்நிலையை சொல்லின் வழியாகவே உணர வைக்கிறது. 

இன்னொரு விதத்தில் கவிஞன் சொற்களை மிதக்கவிடுகிறான். அதன் நேரடி பொருள் மற்றும் பயன்பாட்டிலிருந்து அதை துண்டிக்கிறான். விளையாடுகிறான். பல நேரங்களில் சொல் தனித்த இருப்பு கொண்டுவிடுகிறது.

ஜென் கவிதைகளை வாசிப்பவனின் முன் உள்ள பிரச்சனைகள் கவிதை புரிகிறதா என்பது மட்டுமில்லை. ஏன் இயற்கை இவ்வளவு நெருக்கமாக நம் கண்முன்னே தோற்றம் தருகிறது என்பதே. 

அன்றாட வாழ்வின் சிறு சிறு கணமும் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொண்டதாக மாறிவிடுகிறது. இயற்கையை பற்றிய அவனது முன் அனுபவங்கள் கலைய துவங்குவதும் தன்னிருப்பு குறித்து அவனாக அறிந்து கொள்ள துவங்குவதும் நடக்கிறது. அது அவனது கவிதை வாசிப்பு முறையை மட்டுமில்லை அவனை பற்றி அதுவரை அறிந்து வைத்திருந்த மனசட்டகத்தையே மாற்றி அமைக்க முயற்சிக்கிறது.

அதை ஏற்றுக் கொள்வதும் அனுபவம் கொள்வதும் எளிதானதில்லை. அதே நேரம் அது மிகப்பெரிய சவாலும் இல்லை. கவிதை வாசகன் ஜென் கவிதைகளின் முன்பாக தன் வயதை இழக்கிறான், தன்னை பற்றிய பொது பிம்பங்களை, கருத்தாக்கங்களை நழுவ விடுகிறான். இப்போது அவனுக்கும் அவன் அருகில் ஊர்ந்து கொண்டிருக்கும் சிறு எறும்பிற்கும் பேதமில்லை.
இரண்டும் உயிர்நிலையோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இரண்டிற்கும் உலகம் பிரம்மாண்டமானதாகயிருக்கின்றது. இரண்டும் உலகின் தீராத அன்றாட இயக்கத்தில் அலைந்தபடியே இருக்கின்றன. 

ஜென் கவிதைகள் அறிமுகப்படுத்தும் மலை, நிலவு, குளிர், காற்று, நிழல் எதுவும் நாம் முன் அறிந்தது அல்ல,மாறாக நாம் அறிந்த மலையை நிலவை அறிவு சார்ந்த பொருள் கொள்ளலில் இருந்து நீக்கி அதை கற்பனை கொள்ளவும் உயிர் இயக்கமாக அறியவும் செய்கின்றன. ஜென் கவிதைகளில் தான் மலைகள் நீந்துகின்றன. நிலவு  படுக்கையில் துயில் கொள்கிறது. பாதைகள் கடந்து போக முடியாத தன் இருப்பு குறித்து வெளிப்படுத்துகின்றன.

ஜென் கவிதையில் வரும் நான் ஒரு பயணி.
பயணி என்றதும் ஊர் சுற்றுகின்றவன் என்று பொருள் கொண்டுவிடுவோம். அப்படியல்ல, இந்த பயணி முடிவற்ற தேடுதலின் வழியே தன்னை கண்டு கொள்கின்றவன் தண்ணீரை போல.  அவனது பயணம் இயற்கையை கடந்து போவது அல்ல மாறாக இயற்கையினுள்  போவது. வேப்பிலையின் மீது ஊர்ந்து செல்லும் பூச்சி ஒரே நேரத்தில் நடக்கவும் செய்கின்றது நடந்து செல்லும் இலையை தின்னவும் செய்கிறது. அப்படியான அனுபவமும் சில ஜென் கவிஞர்களிடம் காணமுடிகிறது. 

அவன் உடைகளை களைந்து நீரில் இறங்குவதை போன்று தன்மீது இது வரை போர்த்தபட்ட சுயஅடையாளங்களை இயற்கையின் முன்பாக களைந்து நீந்த துவங்குகிறான். தண்ணீர் அவன் உடலை உள்வாங்கிக் கொள்வது போல எல்லையற்ற இயற்கையின் பெரும்பரப்பு அவனை உள்வாங்குகின்றது. தூய்மை சேர்கிறது. தாதியை போல அரவணைத்து கொள்கிறது. அப்போது அவன் நீருக்குள்ளும் நனையாத தன் உள்ளிருப்பை அறிகிறான். தன் உடல் நனைந்திருக்கிறதே அன்றி நனையாத இருப்பு ஒன்று தனக்குள் இருக்கின்றது என்பதை உணர்கிறான். 

பாறையின் மீது வழிந்தோடும் அருவி தண்ணீர் பாறையின் உட்புறத்தை ஒரு போதும் நனைக்க முடிவதில்லை என்பதைப் போல இயற்கையின் தீண்டுதலில் தன் புலன்கள் கொள்ளும் எழுச்சியை தாண்டி தீண்ட முடியாத அகத்தவிப்பும், விளங்க முடியாதுயரமும், முன்அறியாத சந்தோஷமும்  உருவாவதை அறிகிறான்.

இரவெல்லாம் தூங்க முடியவில்லை என்னால்
என் படுக்கையில்
நிலவொளி கிடந்ததால்
நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன்
ஒரு அழைக்கும் குரலை
எங்கிருந்தோ
ஆம் என பதில் தரவேயில்லை எதுவும்.

கவி : ஸியி.  நாடு சீனா.  நாடோடி பாடல்

இந்த பாடலில் நிலவு முன் காணாத ஒரு நெகிழ்வு தன்மையும் உடனடியும் கொள்கிறது. அதே நேரம் நிலா வெறும் காண்பொருள் அல்ல. அது நம்மோடு கலந்துவிட்ட இயக்கமாக மாறுகிறது. கவிதையின் குரலான நான் நிலவை அனுமதிப்பதின் வழியே அவன் நித்யமான இயக்கத்திற்கு தன்னை மாற்றிக் கொள்கிறான்


இன்னொரு  ஜென் கவிதை.

நான் நின்று போகவும் மாட்டேன்
பள்ளத்தாக்கின் சிற்றோடை முன்பாக
என் நிழல்
உலகினுள் பாய்ந்தோடி விடுமோ
என்ற பயத்தில்.

இந்த கவிதையில் நிழல் பாய்ந்தோடி செல்கிறது என்ற குறிப்பு முன்வைக்கபடுகிறது. நிழல் குறித்த நமது பொதுபுத்தி அது நம்மை பின்தொடர்கிறது என்பது மட்டுமே, இந்த கவிதையில் வரும் நிழல் இயற்கையின் ஒரு பகுதி என்று சுட்டப்படுகிறது. அது பள்ளதாக்கின் சிற்றோடையை கண்டதும் ஒன்றிணைய பாய்கிறது,


வாழ்வின் அன்றாடஅனுபவங்களால் சலிப்புற்ற மனது இயற்கையை பிளாஸ்டிக் போல நினைத்து பழகுகிறது. அதிலிருந்து நம்மை விடுவித்து அருவியின் அடியில் ஒண்டி நிற்கும் தவளையின் வியப்பை போல இயற்கையை காண அனுமதிக்கிறது ஜென் கவிதைகள்.
இதற்காகவே அதை பலமுறை வாசிக்க வேண்டியிருக்கிறது.

சன்மார்க்க சங்கத்தின் முக்கிய கொள்கைகள் :


கடவுள் ஒருவரே; அவர் ஒளிவடிவினர். அவரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்க.
சிறு தெய்வ வழிபாடு கூடாது; உயிர்ப்பலியிடுதலும் விலக்குக.
சாதி, சமய, மத, இன, மொழி, நாடு பாகுபாடுகள் அனுசரித்தல் வேண்டாம்.
எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கைக்கொள்க.
துன்புறும் உயிர்களுக்கு உதவுவதே இறைவழிபாடு. உயிர் இரக்கம் ஒன்றே இறைவனின் பேரருளைப் பெற வழிகோலும்.
பசித்தோரின் பசியாற்றுதல் என்னும் ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
புலால் உண்ணுதல் வேண்டாம். ஏனெனில், எல்லா உயிர்களிலும் கடவுள் விளங்குகிறார்.
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியவற்றில் இலட்சியம் வைக்க வேண்டாம்.
கண்மூடிப் பழக்கவழக்கங்களைக் கைவிடவேண்டும்.
காது, மூக்கு குத்துதல் வேண்டாம்.
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் யோகம் முதலிய சாதனங்கள் கற்பிக்க வேண்டும். பேதமற்று, படிப்பு முதலியவையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
கணவன் இறந்தால் மனைவியிடம் தாலி வாங்குதல் கூடாது.
மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்யற்க.
இறந்தவர்களைப் புதைக்கவேண்டும்; எரிக்கக்கூடாது.
கருமாதி, திதி முதலிய சடங்குகள் செய்யாதீர்; மாறாக, உயிர்நீத்தவர் நினைவில் அன்னதானம் செய்தல் வேண்டும்.
மக்கள் எல்லோர்க்கும் பொதுவான வழிபாடு ஜோதிவழிபாடே!
உண்மை அன்பால் கடவுள் வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க.
பசித்திரு, தனித்திரு, விழித்திரு.
இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க.
ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க ஏமசித்தி, சாகாக்கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல், கடவுள்நிலை அறிந்து அம்மயம் ஆதல் ஆகிய நான்கு பேறுகள் கிடைத்து, மரணமிலாப் பெருவாழ்வு பெறுதல் கூடும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுதல் வேண்டும்.
எதிலும் பொதுநோக்கம் வேண்டும்.

சாகாக்கல்வி: மரணமில்ல பெருவாழ்வு

நீயா நானா - எஸ். ராமகிருஷ்ணன்