Tuesday, June 28, 2011

கடிதம் : நட்புக்கான வழியும் மொழியும் : திறந்த கடிதம் -- நாகூர் ரூமி



அன்பான தமிழோவியம் வாசகர்களுக்கு என் வணக்கம்.
கடந்த ஒன்பது வாரங்களாக தமிழோவியத்தில் நல்லடியார் என்ற நண்பர் வஹீ பற்றி எழுதிவந்திருக்கிறார். நேசகுமாரின் (மொழிபெயர்ப்புக்) கட்டுரைக்கு பதில் கொடுக்கும் முகமாக.
அதில் வந்த கட்டுரையைவிட பல மடங்கு பெரிய மறுமொழிகளையும் நான் படித்தேன். அதில் பல இடங்களில் நேசகுமார், மனிதன், மதுரவேல், நல்லடியார், சோலை, பகுத்தறிவுவாதி போன்ற சிலர் என் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் நான் இந்துக்கடவுள்களைக் கிண்டல் செய்து எழுதியிருந்ததாகவும் நேசகுமாருக்கும் எனக்கும் சொந்தப்பகை இருப்பதாகவும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.
இதுநாள்வரை நான் எதற்கும் பதில் சொல்லாமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று
மதங்களைப் பற்றிய எந்த விவாதமும் புரிந்துகொள்ளும் நோக்கோடு செய்யப்பட்டால் சரி. ஆனால் ஒரு மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளே தவறு என்று சொல்வதற்காக வாதிட்டுக்கொண்டிருந்தால் அதற்கு முடிவே கிடையாது. எனவே, முடிவற்ற ஒரு காலவிரய வேலையில் என்னை நான் ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை. என்னுடைய நம்பிக்கை தவறு என்று நீங்கள் வாதிடுவதனால் எனக்கும் நன்மையில்லை, உங்களுக்கும் நன்மையில்லை.
இரண்டு
என் எழுத்துப்பணிகள் காரணமாக என்னால் விவரமான பதில்களை உடனுக்குடன் கொடுத்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.
நேசகுமார் பற்றி
எனக்கும் நேசகுமாருக்கும் எந்தப் பகையும் கிடையாது. அவர் யாரென்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் அவர் எனது 'இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்' நூலைப்படித்து விட்டு எழுதிய விமர்சனம் அவரைப் புரிந்துகொள்ள உதவியது.
அவருடைய நோக்கம் இஸ்லாமிய நம்பிக்கைகளைத் தகர்க்க வேண்டும், முஹம்மது நபியின் ஒழுக்கத்தைக் குறைசொல்ல வேண்டும் என்ற ரீதியில் தொடர்ந்து இருக்கிறது. ஊர் பேர் தெரியாத எல்ஸ்ட் என்பவனின் கட்டுரையைத் தேடிப்பிடித்து அவர் அவசரமாக தமிழாக்கியதிலிருந்தே இது தெரிகிறது.
இது காலம் காலமாக இஸ்லாத்தை வெறுத்த மேற்கத்தியர்கள் செய்த வேலைதான். டிஷ்னரி ·ப் இஸ்லாம் எழுதிய தாமஸ் பாட்ரிக் ஹ்யூஸ் என்ற பாதிரியைப் போல. அற்புதமான உழைப்பில் உருவான அந்த நூலில் ஆங்காங்கு அவர் இஸ்லாத்தின் மீதும் நபிகள் நாயகத்தின் மீதும் நஞ்சு தடவி வைத்திருப்பார். கவனமாகப் படிப்பவர் யாரும் இதைப்புரிந்துகொள்ள முடியும்.
நேசகுமார் எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் எனது நூலிலேயே பதில் இருக்கிறது. ஆனால் அவருக்கு அதெல்லாம் போதவில்லை. அல்லது தவறாகப்படுகிறது. அவர் நினைப்பதை நான் சொல்லியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எந்த பதிலாலும் அவரைத் திருப்திப்படுத்த முடியாது.

அவருடைய கேள்விகளுக்கு ஏன் நான் மௌனம் சாதிக்கிறேன் என்று பல நண்பர்கள் பலமுறை என்னைக் கேட்டிருக்கிறார்கள். வெள்ளையைக் கறுப்பென்று சாதிக்கும் ஒருவர் குருடராக இருக்க வேண்டும் அல்லது பார்வைக் கோளாறு உள்ளவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவருக்கு நான் என்ன பதில் சொல்ல? இம்மையில் குருடர்களாக இருப்பவர்கள் மறுமையிலும் குருடர்களாகவே இருப்பார்கள் என்று திருக்குர்ன் கூறுவது ஞாபகம் வருகிறது.
என்னுடய விமர்சனக் கட்டுரைகளின் நேர்மையைக்கூட அவர் சந்தேகித்து அதற்கு சாமர்த்தியம் என்ற பெயர் கொடுக்கிறார். கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை நிறைவேற்றப்படுவதைக் கண்டித்து நான் கற்காலம் என்ற தலைப்பில் என் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். அதுகூட மறைமுகமாக இஸ்லாத்துக்கு வக்காலத்து வாங்கும் செயல் என்று அவர் சொல்கிறார்.
நான் இப்போது சொல்கிறேன். மறைமுகமாகச் செய்யவேண்டிய அவசியம் எனக்கு ஏதுமில்லை. நான் வெளிப்படையாகவே செய்கிறேன். நான் மதத்தால் ஒரு முஸ்லிம். திருக்குர்ன் என்பது இறைவனுடைய செய்தி என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதில் தவறிருக்க முடியாது என்று நான் திடமாக அறிகிறேன்.
இறைச்செய்தியின் தன்மை
இறைவனின் செய்தி என்பது மொழிதாண்டிய ஒரு விஷயம் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதனால்தான் சில நேரங்களில் வஹீ தனக்கு தேனீக்களின் ரீங்காரம் போலவும் மணியோசை போலவும் வந்ததாக நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள்.
தேனீக்களின் ரீங்காரமும் மணியோசையும் அரபி மொழியில் இருக்காது என்பது தெளிவு. அப்படியானால்? மிகத்தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது. நபிகள் நாயகம் பேசிய, அவர்களுக்குத் தெரிந்த ஒரேமொழி அரபி மொழிதான். எனக்கு இறைச்செய்தி வந்தால் அதை நான் தமிழில்தானே புரிந்துகொள்ள முடியும்? அதேபோல அவர்கள் அவர்களுடைய மொழியில் அதை உள்வாங்கிக்கொண்டார்கள்.
இதுதான் ஹதீதுகளின் உட்குறிப்பு.
இந்த அடிப்படையில்தான் நான் திருக்குர்னின் வசனங்களைப் புரிந்துகொள்கிறேன். விபச்சாரம் புரிந்தததாக நிரூபிக்கப்படும் பெண்ணுக்கும் ஆணுக்கும் கசையடி கொடுங்கள் என்று சொல்லும் வசனத்தை, குற்றவாளிகளை தண்டியுங்கள் என்று இறைவன் சொல்வதாகத்தான் நான் அர்த்தப்படுத்துகிறேன். ஏனெனில் காவல் நிலையமோ, சிறைகளோ, லத்திகளோ, துப்பாக்கிகளோ, நீதிமன்றங்களோ இல்லாத ஒரு காலம் அது. சாட்டையும், அம்பும், வாளும், தோளும் கொண்டு மனிதர்கள் வாழ்ந்த காலம். எனவே இன்றைய காலகட்டத்தில் 'அடல்ட்ரி' செய்த ஒருவருக்கு இன்றைய சட்டங்களின்படிதான் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது என்னுடைய விளக்கம் அல்லது புரிந்துகொள்ளல். இதை ஒத்துக்கொள்ளாத முஸ்லிம் அறிஞர்கள் இருக்கலாம்.
இன்றைக்கு பள்ளிவாசல்களில் மொசைக் தரை அல்லது மார்பிள் தரை போடப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ளது. குளிர்பதனம் செய்யப்படுகிறது. மின்விசிறிகள் சுழல்கின்றன. குழல் விளக்குகள் எரிகின்றன. நபிகள் நாயகத்தின் காலத்தில் இருந்த மாதிரியா வெறும் பாலவனக் களிமண்ணில் இருக்கின்றன? நபிகள் நாயகம் காய்ந்த ரொட்டியையும் பேரீச்சம் பழங்களையும்தான் பெரும்பாலும் சாப்பிட்டார்கள். நாம் அப்படியா சாப்பிடுகிறோம்? சிக்கன் 65, பிரியாணி என்று வெளுத்துக் கட்டவில்லையா? கல்லாலடித்துக் கொல்லும் கொடூர தண்டனை கொடுக்கும் நீதிபதிக்கும் இது பொருந்தும்.
மற்ற எல்லா வகைகளிலும் 21-ம் நூற்றாண்டை ஏற்றுக்கொண்ட நாம் தண்டனை கொடுப்பதில் மட்டும் ஏன் 1425 ண்டுகளுக்கு முந்திப் போகவேண்டும்? இதுதான் என் கட்டுரையின் பிரதான கேள்வி.
கூடாஒழுக்கத்தில் ஒரு குரங்கு ஈடுபட்டிருந்ததாகச் சொல்லும் ஹதீது ஒன்றைக் குறிப்பிட்டு அந்த ஹதீதைச் சொல்பவரும் ஒரு குரங்காகத்தான் இருப்பார் என்றுகூட அந்தக் கட்டுரையில் நான் மறைமுகமாகக் கிண்டல் செய்திருக்கிறேன். ஹா, ஹதீதில் குறிப்பிடப்படும் ஒருவரை எப்படி நாகூர் ரூமி அப்படிச் சொல்லலாம் என்று உடனே எனக்கு எதிராக ‘·பத்வா’க்கள் வழங்கினால் என்னர்த்தம்? யாரையும் கேவலமாகப் பேசுவதோ குரங்கென்று சொல்வதோ எனது நோக்கமல்ல. அப்படி ஒரு ஹதீது இருக்க சாத்தியமில்லை என்ற கருத்தைத்தான் நான் அப்படி உணர்த்த முயன்றிருக்கிறேன். எந்த முஸ்லிம் பத்திரிக்கையும் அதை வெளியிட முன்வாரத நிலையில்தான் எனது தளத்தில் அதை வெளியிட்டேன். (இந்துக்கடவுள்களை நான் கிண்டல் செய்தேன் என்ற கற்பனையான குற்றச்சாட்டும் இந்த வகையைச் சேர்ந்தததுதான்). என்னுடைய நேர்மையை சாமர்த்தியம் என்கிறார் நேசகுமார்!
நேசகுமாரின் எழுத்தின் தன்மை
முதலில் நேசகுமார் இஸ்லாம் பற்றி ஒரு விவாதத்தைத் துவக்கியிருக்கவே தேவையில்லை. அதற்கான தகுதியும் அவருக்கு நிச்சயமாகக் கிடையாது. காரணம், திருக்குர்னும் ஹதீதும் மூலமொழியாகிய அரபியில் இருக்கின்றன. எந்த மொழியில் நாம் மொழிபெயர்த்துப் படித்தாலும் அது நம்முடைய புரிந்துகொள்ளலாகவே இருக்கும். எனவே எந்தவொரு மொழிபெயர்ப்பையும் வைத்து ஒரு வசனம் அல்லது ஹதீதின் அர்த்தம் இதுதான் என்று நாம் அடித்துக்கூற முடியாது. இது ஒருவிஷயம்.
அடுத்தது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் தொடர்பானது. இது முஸ்லிம்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம்.
திருக்குர்ன் இறைவனின் வேதம் என்றோ நபிகள் நாயகம் இறுதித் தூதர் என்றோ ஒரு முஸ்லிம் நம்புவதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு என்ன பிரச்சனை? அப்படியெல்லாம் கிடையாது என்று ஏன் ஒருவர் மறுக்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன ஏற்பட்டது?  நீங்கள் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லையே!
சமஸ்கிருதம் தெரியாத நான், கீதையின் சில வசனங்களை மொழிபெயர்ப்பில் எடுத்து வைத்துகொண்டு, பகவத் கீதையின்படி ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு ஸ்த்ரீ லோலர் என்று கீதையை 'விளக்க' ஆரம்பிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். விஷய ஞானமுள்ள அறிஞர்கள் சிலர், அதை அப்படிப் பார்க்கக் கூடாது என்று எனக்கு விளக்குவதாக வைத்துக்கொள்வோம். அதையும் மீறி, நான் 'இல்லை, இப்படித்தான்' என்று 'ஆதாரங்கள்' காட்டிக்கொண்டிருந்தால் என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
திருக்குர்னின் வசனங்களுக்கு ‘விளக்கம்’ சொல்ல வரும் நேசகுமாரின் கதையும் இதேதான். ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பதன் அர்த்தத்தை அவர் புரியவைத்துக் கொண்டிருக்கிறார்! இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இஸ்லாத்தையோ முஸ்லிம்களையோ எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை.
நாகூர் ரூமி இந்துக்கடவுள்களைப் பற்றி கிண்டலாக எழுதிவிட்டார் என்றுதான் வெறுப்பிலும் காழ்ப்புணர்ச்சியிலும் நேசகுமார் இஸ்லாத்தைப் பற்றி இப்படி எழுதிக்கொண்டிருக்கிறார் என்றால் எங்கேபோய்ச் சிரிப்பது?
முதலில், நான் இந்துக்கடவுள்களைப் பற்றி எங்கே கிண்டலாக எழுதியிருக்கிறேன் என்று சுட்டிக்காட்டுங்கள். என் நடை கிண்டலானதுதான். நான் எதை எழுதினாலுமே. (தவறான ஹதீது ஒன்றின் அறிவிப்பாளரைக் குரங்கென்று கிண்டல் செய்த உதாரணத்தை இங்கே இணைத்துப் பார்க்கவும்). ஆனால் இந்துக் கடவுள்களை கிண்டல் செய்து எழுதியதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி நான் எழுதியிருந்தால், அதை எனக்கு நாகரீகமாக யாராவது சுட்டிக்காட்டியிருந்தால், அதில் உண்மையிருந்தால், நான் நிச்சயமாக என் கருத்தை மாற்றிக்கொண்டிருந்திருப்பேன். ஆனால் ஒரு கற்பனையான குற்றச்சாட்டுக்காக, இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் அவதூறு செய்வேன் என்று ஒருவர் சொல்வது அபத்தமானதல்லவா?
எழுத்தும் நட்பும்
ஒரு இந்துவும் ஒரு முஸ்லிமும் நண்பர்களாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். மனிதாபிமானம், அன்பு, நட்பு இதெல்லாம் மதம் பார்த்து வருவதில்லை. மனிதம் பார்த்து வருவது. ஆனால் இரண்டு மதங்களின் அடிப்படை நம்பிக்கைகள் வெவ்வேறாக இருக்கும்போது, ஒரு மதத்தின் அடிப்படை நம்பிக்கையே தவறு என்று வாதிடுவதால் நிச்சயமாக நட்பு மலராது. நட்பு மலரவேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

தமிழோவியத்திலேயே நான் எழுதிய 'நிலவைச் சுட்டும் விரல்' என்ற தீபாவளி பற்றிய கட்டுரையையோ ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றிய 'இறக்கும் கலை' என்ற கட்டுரையையோ, எனது தளத்தில் நான் எழுதியுள்ள ரமணர், பகவத்கீதை பற்றிய கட்டுரைகளையோ, திசைகளில் நான் எழுதிய ஓஷோ பற்றிய 'நூறாவது டிகிரி' என்ற கட்டுரையையோ படித்துப் பாருங்கள். என் மனது உங்களுக்குப் புரியலாம்.
எழுத்தின் அடிநாதமாக உள்ள spirit-ஐப் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். புண்படுத்துவது எப்போதுமே என் நோக்கமல்ல. ஆனால் உயிரைவிட நாங்கள் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தையோ அவர்களின் மனைவிமார்களான அன்னையர்களையோ ஒருவர் கேவலமாகப் பேசினால் எந்த ஒரு உண்மையான முஸ்லிமுக்கும் கோபம் வரத்தான் செய்யும். அத்தகைய கேவலமான காரியத்தை திரும்பத் திரும்ப ஏன் செய்ய வேண்டும்? உங்களுடைய தாயையோ சகோதரியையோ பற்றி ஒருவர் கேவலமாக எழுதினால் இப்படி பொறுமையாக விவாதித்துக்கொண்டிருப்பீர்களா?
என்னுடைய இஸ்லாம் பற்றிய நூல் ஒரு அறிமுக நூல்தான். அது ஒரு விமர்சன நூல் அல்ல. என்னைப் பொறுத்தவரை இஸ்லாம் அமைதியைப் போதிக்கின்ற மார்க்கம். அதற்கான கூறுகளைத்தான் இஸ்லாமிய வரலாற்றிலும் நபிகள் நாயகத்தின் வாழ்விலும் பார்க்க முடியும். முஸ்லிம்கள் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடுவார்களேயானால் திருக்குர்னும் நபிகள் நாயக வழிகாட்டுதலும் அதற்கு எதிரானதாகவே இருக்கின்றன என்பதுதான் என்னுடைய புரிந்துகொள்ளல். மற்ற எல்லா வகையான வன்முறை விளக்கங்களும் தவறானவை என்பதே என் கருத்து.
என் கருத்து எனக்கு. உங்கள் கருத்து உங்களுக்கு. நட்புடன் இருக்கத்தான் எழுத்தும் பேச்சும் மூச்சும் எல்லாமே. அதற்கான வேலைகளைச் செய்யலாமே!
எனவே மீண்டும் ஒரு விவாதத்தைத் துவக்குவதற்கான கட்டுரை அல்ல இது. எல்லா விவாதங்களையும் முடிப்பதற்கான ஒரு வேண்டுகோள். நேசகுமார் இதற்கும் ஒரு நூறு பக்கத்துக்கு பதில் எழுதினாலோ அல்லது வேறு யாரும் மறுப்பு எழுதினாலோ நான் பதில் சொல்லப்போவதில்லை. விருப்பு வெறுப்பின்றி நான் சொல்வதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். அவ்வளவுதான்.
இந்தக் கடிதத்துக்கு வரும் நியாயமான பதில்களை மட்டும் அனுமதிக்கும்படியும், விவாதத்தைத் தூண்டும் விதமாகவும், நாகரீகமற்ற மொழியில் வரும் மறுமொழிகளையும் அனுமதிக்க வேண்டாமென நண்பர் கணேஷ் சந்திராவையும் நான் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
கூடிய விரைவில் சூ·பித்துவம் பற்றிய ஒரு தடித்த புத்தகத்துடனும், ஹோமரின் காவியமான இலியட்-டின் தமிழாக்கத்துடனும் உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்
நாகூர் ரூமி
இது தொடர்பாக தனிப்பட்ட கேள்விகள் இருப்போர் ruminagore@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.

No comments:

Post a Comment