Friday, September 4, 2015

உங்கள் தூக்கம் இதில் எந்த வகையானது?


கடந்த தொடரில் உறக்கத்தின் மூன்று நிலைகளை பற்றி குறிப்பிட்டிருந்தோம்.
இதன் கடைசி நிலை தான் துரீயம் என்ற சமாதி நிலை. இதனை 'உறை உணர்வு கடந்த நிலை' என்றும் சொல்வர். இதில் விழிப்பு, கனவு, தூக்க நிலைகள் மூன்றும் அடங்கி விடுகின்றன. ஆகவே, விழிப்பிலும் துரீய நிலையில் இருந்து கொண்டு இயங்க முடியும். கனவிலும் கூட இதனை உணர முடியும். இயல்பான நல்ல தூக்கத்தின் சுகமும் இதில் உண்டு. அதாவது பரு உடலின் தொடர்பின்றி துரீயத்தில் இருக்க முடியும். தியானத்தின் ஆழ்ந்த நிலையில் இருப்பவர்கள் இந்த துரீய நிலையை எளிதாக உண்டாக்கி கொள்ள முடியும். அதாவது, ஒரு சில மனநல மருத்துவர்கள் எந்த மருந்துகளும் இல்லாமல் ஒருவரின் ஆழ்மனதில் பதிந்திருக்கும் எண்ணங்களை கேட்டறிய அவர்களை ஆழ்துயிலில் ஆழ்த்துவதுண்டு. அது போன்ற ஒரு நிலை தான் இதுவும்.
இது போன்ற ஒரு நிலையை தியானத்தின் மூலம் வரவழைத்துக் கொள்ளும் நிலை என்பது வேறு. துரீய நிலையை எய்தியவரின் உடலைச் சுற்றி இருக்கும் அதிர்வலைகள் என்பது மிகுந்த சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்கிறார்கள் ஞானிகள். அதாவது துரீயத்தில் இருப்பவரின் உடலை அதற்கான நுண்ணோக்கியால் நோக்கினால் அதில் உடலை சுற்றி காணப்படும் வண்ணங்கள் வித்தியாசமாக இருக்கும். உடல் முழுவதையும் ஒரு நீல நிறப்பிழம்பு போர்த்தியது போல் காணப்பட்டு அந்த பிழம்பின் நுனியானது தங்க நிறத்தில் தகதகப்பாக தோன்றும் என்கிறார்கள். இந்த நான்கு நிலைகளின் கலப்பாக தூக்கத்திற்கு 16 வகையான நிலைகள் இருப்பதாக எழுதுகிறார் பதஞ்சலி யோக சூத்திரம் நூலை எழுதிய சுவாமி. அதாவது,
விழிப்பில் விழிப்பு:
நமது மனமானது மறதி, மனக்கோளாறுகள் எதுவுமின்றி முழு நினைவுடன் இருப்பது.
விழிப்பில் கனவு
சூழ்நிலையை மறந்து இன்பமான கற்பனை மனக்கோட்டைகளில் ஆழ்ந்திருத்தல், உருவெளித்தோற்றங்களை காணுதல்.
விழிப்பில் தூக்கம்
தன் நினைவு சூழ்நிலைகளில், ஒன்றையோ இரண்டையோ அறியாமல் பிரமை பிடித்தது போல் இருப்பது. இந்த நிலையில் எதையும் மனது கவனிப்பதோ, புரிந்து கொள்வதோ இல்லாமல் இருத்தல். தூக்கத்தில் நடப்பது போல் தினசரி வேலைகளும் இருக்கும்.
விழிப்பில் துரீயம்
ஆன்மீக செய்திகளில் தொடர்பு இருக்கும். கடவுள் பக்தி, ஆன்மீக நூல் படிப்பது, உபநியாசம் கேட்பது, திருவிழாக்களில் பங்கெடுத்துக் கொள்வது, பக்தி யாத்திரைகளை மேற்கொள்வது, யோகாசனங்களை செய்வதில் ஆர்வம் போன்றவை இருக்கும்.
கனவில் விழிப்பு
கனவு காணும் போது அது கனவு என்ற அறிவு ஏற்படும். விழிப்பு நிலையில் செய்ய வேண்டியவற்றின் நினைவு கனவிலும் உண்டாகும். விழிப்பில் இயங்குவது போல கனவிலும் மனது வேகமாக இயங்கும்.
கனவில் கனவு
கனவு காண்பதில் கனவு வருதல் என்று சொல்வார்கள். அதாவது கதைக்குள் கதை வருவது போல். கனவில் தோன்றும் ஒருவர் தோன்றும் ஒருவர் முகம் பாதியில் வேறோருவர் முகமாகி விடும். எதைப்பற்றியோ யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பது போல தோன்றும். சில நேரங்களில் கண்ட கனவின் தொடர்ச்சி வரும். ஏற்கனவே கனவில் கண்டவர் மீண்டும் தோன்றுவார். கனவில கண்டதையே அடிப்படையாக வைத்து ஒரு தொடர்கதை போல் இன்னொரு கனவு வரும்.
கனவில் தூக்கம்
தெய்வக் காட்சிகள் உண்டாவது, மகான்களின் தரிசனம் கிடைப்பது, கோவில் திருவிழாக்களை பார்த்தல், தத்துவக்கருத்துக்கள் தோன்றுதல் முதலியவை. இது போன்ற கனவுகள் ஏறக்குறைய துரீய நிலையின் ஒரு பகுதி. இந்த மாதிரியான கனவுகள் ஒரு வகையான புல்லரிப்பை உண்டாக்கும்.
தூக்கத்தில் விழிப்பு
தூங்கும் போது தூக்கத்தில் நடப்பது, சாப்பிடுவது போன்றது. கனவுகளின் போது இப்படி நடக்கும் சம்பவங்கள் உடலின் ஜீவன் கனவின் போது பருவுடலையும் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வாகும். அதாவது, ஆசாபாசங்கள் தேவையின் அளவு அதிகமாவதால் மேல் மனம் உறங்கும் போது, உள்மனம் எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கிறது. அந்த உள் மனம் சில நேரங்களில் கனவு காணும் நிலையில் உடலையும் சில செயல்களை செய்ய ஏவிவிடும். ஹிஸ்டிரியா போன்ற சில நோய்கள் இந்த நிலையில் தான் உண்டாகின்றன. தூக்கத்தில் எழுந்து எல்லா வேலைகளையும் சரியாக செய்வர். ஆனால் விழித்து எழுந்ததும் தான் என்ன செய்தோம் என்ற நினைவு இவர்களுக்கு இருக்காது.
சிலர் மனதில் ஆழமாக பதிந்து விட்ட எண்ணத்தால், தூக்க நிலையை மேல் மனம் அடையும் போது, தங்களை ஆவிகளாகவும், குட்டி தேவதைகளாகவும் எண்ணிக் கொண்டு அருள் சொல்வதும் ஆடி,ஓடி, ரகளை செய்வதும் உண்டு. இவர்களுக்கு அசுர சக்தி உண்டாகும். சில நேரங்களில் போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கும் இப்படி ஒரு சக்தி உண்டாகும். இவர்கள் விழித்திருக்கும் நபர்களுடன் பேசுவர். ஆனால் சாதாரண நிலைக்கு வந்த பின் யாரிடம் பேசினோம் என்ன பேசினோம் என்பதை இவர்கள் உணர மாட்டார்கள்.
தூக்கத்தில் கனவு நிலை
மேல் மனம் உறங்கும் போது உள்மனம் கனவு காண்கிறது. எப்போதும் விழித்திருக்கக் கூடிய உள்மனம் எப்போதாவது அதிசயமாக கனவில் ஆழ்ந்து விடும். அப்போது அது எதையும் நம்பிவிடும். அதற்கு கனவும் உண்மையான தோற்றமாக தோன்றும். ஆகவே, தான் காணும் கனவை பிறரையும் காண வைக்கிறது. உள்மனம் மிகவும் விசாலமானது. எனவே, அது உடலுக்கு வெளியிலும் இயங்குகிறது. இதனால் தான், இந்த நிலையில் உள்ளவர் பிறரையும் பாதிக்கின்றனர். இவர்கள் தம் தூக்ககனவில் காண்பதை பிறகும் காணும்படி சிலநேரம் செய்கிறார்கள். ஆவியுடலில் இருந்து பருவுடலுடன் தொடர்பு கொள்வர்.
பயங்கர கனவுகளை காணும் போது தங்கள் உடலில் மாறுதலை அடைவார்கள். சில நேரங்களில் தாங்கள் சண்டையிடுவது போல் கனவு காணும் போது உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். உள்மனது வெளியில் சஞ்சரிப்பதால் அவர்களது உடலில் இருக்கும் கட்டுப்பாட்டுக் கேந்திரம் கட்டுப்பாட்டை இழந்து விடும். அப்போது இவர்கள் நிகழ்த்தும் காரியங்கள் விழிப்பு நிலையில் இருப்பவர்களுக்கு ஆச்சரியமாக தோன்றும். இப்படி செயல்களை நிகழ்த்துபவர்களை பார்த்து தான் அவர்களுக்கு பேய் பிடித்து விட்டதாக அல்லது சாமி இறங்கிவிட்டதாக சொல்வதுண்டு. அதாவது, மேல் மனம் உறக்கத்தில் ஆழும் போது உண்டாகும் மனநிலைகள் இவ்வாறு ஒருவரை நடந்து கொள்ள தூண்டுகின்றன.
தூக்கத்தில் காணப்படும் இன்னும் பல நிலைகளை பற்றியும், எந்த கனவுகளும் அற்ற ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் யோகாசனங்களையும், தியானங்களையும் பற்றி வரும் தொடரில் பார்க்கலாம்.
தூக்கம் :

ஒருவன் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்கிறானோ அவனுக்கு பலம் அதிகம்.இராவணன் மகனான இந்திரஜித்து எவனொருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் இருக்கிறானோ அவனே இந்திரஜித்தை கொல்வான்,என்ற வரம் பெற்றவன். இலக்குவன் தன் அண்ணனுக்கும்,அண்ணிக்கும் 14 ஆண்டுகள் காவலிருக்கும் பொருட்டு தன் மனைவியான ஊர்மிளையிடம் தன் உறக்கத்தை கொடுத்துவிட்டு போனதாக கதை உண்டு(14 ஆண்டுகள் ஊர்மிளை தூங்கிக் கொண்டே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது).அதன் காரணமாக 14 ஆண்டுகள் தூங்காமல் இருந்து பின் அது தந்த பலத்தின் காரணமாக(இலக்குவனை கொல்ல இந்திரஜித்து நிகும்பலையில் யாகம் செய்தும்) இந்திரஜித்தை, இலக்குவன் கொன்றார்.
திருவருட் பிரகாச ராமலிங்க வள்ளலார் எவன் ஒருவன் தினம் ஒரு மணிநேரம் மட்டும் உறங்குகின்றானோ அவன் ஆயிரம் வருடம் உயிர் வாழ்வான் என்கிறார்.
தூக்கத்தின் போது மூச்சு மிக அதிகமாக ஒடி உயிர் அழிகிறது.எனவே தூங்கும் போது மூச்சு அதிகம் ஓடி (நிமிடத்துக்கு 64 மூச்சு வீதம் ஓடி)ஆயுள் விரயமாகி நாம் மடிகின்றோம்.
இதையே அகத்தியர்
உண்ணும்போது உயிர் எழுத்தை உயரே வாங்கு,
உறங்குகின்ற போதெல்லாம் அதுவே ஆகும்,
பெண்ணின் பால் இந்திரியம் விடும் போதெல்லாம்
பேணி வலம் மேல்தூக்கி அவத்தில் நில்லு
தின்னும் காய் இலை மருந்து இதுவேயாகும்
தினந்தோறும் இப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார்தாமே
மறலி கையில் அகப்படுவார் மாட்டர்தாமே.
-அகத்தியர்-
உண்ணும்போதும் உயிர் எழுத்தான மூச்சுக் காற்றை அதிகமாக ஓடவிடாமல் பிடித்து இழுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.உறங்குகின்ற போதும் இப்படியே இருக்க வேண்டும்.பெண்ணிடம் சம்போகத்தில் ஈடுபடும்போதும் இதே போல் மூச்சைப் பேணி மேல் தூக்கி அவத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உயிர் அழியாமல் இருக்க தின்னக் கூடிய காயகற்பமாகிய காய் இலை மருந்து இதுவேயாகும். தினந்தோறும் இது போல் உங்களால் செலுத்த முடியுமானால் இந்த மண் உள்ள வரையில் உயிர் வாழலாம்.மறலி என்றால் எமன்,அந்த எமன் கையில் அகப்பட்டு உயிரை விட மாட்டீர்கள் என்று அகத்தியர் கூறுகிறார்.
வள்ளலார் இதை
பசித்திரு!
தனித்திரு!
விழித்திரு!
பசி ஒரு திரு(திரு என்றால் செல்வம்),தனித்திரு (தனிமையாக இருப்பது ஒரு செல்வம்,இதையே அவ்வையார் இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று தனிமையைப் போற்றுகிறார்),விழித்திரு(விழிப்போடு இருப்பது ஒரு செல்வம்).
பசியோடு இருந்தால் தூக்கம் வராது,விழிப்போடு இருப்பதான செல்வம் தானே வரும்.தனிமையான செல்வத்தை ஏற்படுத்திக் கொண்டு இறையை தியானம் செய்தால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.(இதையே அவ்வையார் அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் என்கிறார்)
எனவே தூக்கத்தை குறைக்கும் வழி அறிந்து குறைத்தால் மூச்சு விரயம் குறைந்து மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

No comments:

Post a Comment